சாரதா சிட் பண்ட் மோசடி: இ.டி சம்மனுக்கு எதிரான நளினி சிதம்பரம் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!
சென்னை: சாரதா சிட் பண்ட் மோசடி வழக்கில் தம்மை நேரில் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்ட அமலாக்கத்துறை சம்மனுக்கு தடை கோரி மூத்த வழக்கறிஞரும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவியுமான நளினி சிதம்பரம் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.
கொல்கத்தாவை மையமாக கொண்டு சுதீப்தா சென் என்பவர் நடத்திய சாரதா சிட் பண்ட் நிறுவனம் பொது மக்களிடம் இருந்து ரூ.30 ஆயிரம் கோடி வரை சுருட்டியது என்பது குற்றச்சாட்டு. முதலீட்டாளர்கள் அளித்த புகாரின் பேரில் சுதீப்தா சென் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் சிபிஐ நீதிமன்றத்தில் 6-வது துணை குற்ற பத்திரிக்கையில் நளினி சிதம்பரத்தின் பெயர் சேர்க்கப்பட்டது. ஆனால் நளினி சிதம்பரம் குற்றவாளியாகவோ, சாட்சியாகவோ சேர்க்கப்படவில்லை.
ரூ1 கோடி
சாரதா சிட் பண்ட் நிறுவனத்தின் பணப் பரிவர்த்தனையில் நளினிக்கு தொடர்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதாவது காங்கிரஸ் கட்சியில் இருந்த மனோரஞ்சனா சிங் என்பவர் டிவி நிறுவனம் தொடங்க ரூ42 கோடி தர வேண்டும் என சுதிப்த சென்னிடம் நளினி வலியுறுத்தியிருக்கிறார். இதற்கான ஒப்பந்தத்தையும் நளினி தயாரித்திருந்தார். இதற்காக நளினிக்கு வழக்கறிஞர் கட்டணமாக ரூ1 கோடி கொடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமலாக்கப்பிரிவு, சிபிஐ அதிகாரிகள் முன் விசாரணைக்கு நளினி சிதம்பரம் ஆஜராகி இருந்தார்.
மீண்டும் சம்மன்
இதனிடையே மீண்டும் கொல்கத்தாவில் விசாரணை குழு முன்னர் ஆஜராகுமாறு நளினி சிதம்பரத்துக்கு அண்மையில் அமலாக்கப் பிரிவு சம்மன் அனுப்பியது. புதிய ஆதாரங்கள் சில கிடைத்ததால் நளினி சிதம்பரத்துக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.
சம்மனுக்கு எதிராக மனு
ஆனால் இந்த சம்மனுக்கு தடை கோரி தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார் நளினி சிதம்பரம்.
காரணம்...
தம்முடைய மனுவில், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி ஒரு பெண்ணை விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்ப முடியாது; அந்த பெண்ணின் வீட்டுக்கு போய்தான் அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என்று சுட்டிக்காட்டியுள்ளார் நளினி சிதம்பரம்.
தீர்ப்பு ஒத்திவைப்பு
இம்மனு மீது இன்று நீதிபதி சிவஞானம் விசாரணை நடத்தினார். விசாரணைக்குப் பின்னர் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.