ஜிலுஜிலுன்னு மாறும் குற்றாலம்.. ஜூலையில் சாரல் விழா.. கலெக்டர் அறிவிப்பு.. ஏற்பாடுகள் தீவிரம்
ஜூலை மாதம் குற்றாலத்தில் சாரல் திருவிழா நடைபெற உள்ளது.
குற்றாலம்: வருகிற ஜூலை மாதம் குற்றாலத்தில் சாரல் திருவிழா நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இயற்கை அளித்த கொடைகளில் அற்புதமான ஒன்று குற்றாலம். தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத்தலமாகவும் இது உள்ளது. குற்றாலத்தின் இதமான காற்றும், மெல்லிய சாரலும் பச்சை பசேலென்ற மலைப்பகுதியும் உடலுக்கும் மனதுக்கும் என்றம் புத்துணர்ச்சி அளிக்கக் கூடியது. குறிப்பாக மூலிகை மணம் நிறைந்த பொங்கி வரும் அருவிகளில் குளிப்பதற்காகவே மூலை முடுக்கிலிருந்தெல்லாம் ஆண்டுதோறும் சுற்றுலா பயணிகள் குவிந்து வருவர்.
ஆண்டுதோறும் ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரை சீசனை அனுபவிக்க ஏராளமானோர் குற்றாலம் வருவதால், அவர்களை மகிழ்விக்க மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சாரல் திருவிழா நடத்தப்படுகிறது. இந்தாண்டுக்கான சாரல் திருவிழா ஜூலை மாதத்தில் நடத்தப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ஷில்பா சதீஷ் பிரபாகர் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இதனைதொடர்ந்து குற்றாலத்தில் சீசன் தொடங்கியுள்ள நிலையில் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி பகுதிகளில் ஆட்சியர் ஆய்வினையும் மேற்கொண்டு வருகிறார். சாரல் திருவிழாவின்போது வியாபாரம் சூடுபிடிக்கும் என்ற நம்பிக்கையில் நடைபாதை வியாபாரிகள் மற்றும் தற்காலிக கடை அமைத்திருப்பவர்களும் இப்போதே அதற்கான முன்னேற்பாடு வேலைகளில் இறங்கியுள்ளனர்.