குற்றாலத்தில் களைகட்டிய சாரல் விழா: குவியும் சுற்றுலா பயணிகள்
குற்றாலம்: குற்றாலத்தில் சாரல் விழா தொடங்கியுள்ளதை அடுத்து அங்கு ஏராளமான பயணிகள் குவிந்து வருகின்றனர்.
குற்றாலம் சாரல் திருவிழா 26ம் தேதி சனிக்கிழமை மாலை தொடங்கியது. தொடக்க விழாவில் அமைச்சர் செந்தூர் பாண்டியன் தலைமை வகித்தார். சுற்றுலா துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் சாரல் விழாவை தொடங்கி வைத்து பேசினார், அப்போது அவர், சுற்றுலாத்துறைக்கு முதல்வர் ஜெயலலிதா அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார். அ.தி.மு.க அரசு பொறுப்பேற்று 3 ஆண்டுகளில் குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு அதிகரித்து கொண்டே செல்கிறது.
2011ம் ஆண்டு 37 லட்சத்து 87 ஆயிரம் பேரும், 2012ம் ஆண்டு 50 லட்சத்து 14 ஆயிரம் பேரும், 2013ம் ஆண்டு 70 லட்சத்து 77 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்து சென்றுள்ளனர். அதே போல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் 2011ம் ஆண்டு 31 ஆயிரத்து 996 பேரும், 2012ல் 34,491 பேரும், 2013ம் ஆண்டு 38,929 பேரும் வந்து சென்றுள்ளனர்.
உள்நாட்டு சுற்றுலா பயணிகளை கவர்வதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. மராட்டியம் 2வது இடத்தில் உள்ளது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவருவதில் மராட்டியம் முதலிடத்திலும், தமிழகம் அந்த இடத்தை நெருங்கி கொண்டு வருகிறது.
2023ம் ஆண்டு தமிழகம் அனைத்து துறைகளிலும் முதலிடத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக முதல்வர் ஜெயலலிதா பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். அந்த வகையில் சுற்றுலா துறைக்கு மட்டும் ரூ.10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார் என்றார்.
குற்றாலத்தில் மாசு ஏற்படாத வகையில் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட வேண்டும். வனப்பகுதிகள் பாதுகாக்கப்பட வேண்டும். சுற்றுலா பயணிகளுக்கு உரிய முறையில் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு சிறப்பு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இதனால் சரித்திரம் பேசும் சுற்றுலாத் தளமாக குற்றாலம் விளங்கும் என்பதில் ஐயமில்லை . சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
விழாவில் அரசு இசைப்பள்ளி மாணவர்களின் மங்கள இசை, தூத்துக்குடி கைலாசமூர்த்தி குழுவினரின் ஒயிலாட்டம், பரதநாட்டியம், பல்சுவை, இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சாரல்விழா ஆகஸ்ட் 2ம் தேதி வரை ஒரு வாரம் நடைபெற உள்ளது.
நீச்சல் போட்டி
சாரல் விழாவை ஒட்டி குற்றாலம் பேரூராட்சிக்கு சொந்தமான நீச்சல்குளத்தில் நடைபெற்ற நீச்சல் போட்டிகளை ஏ.எஸ்.பி. அரவிந்தன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். போட்டிகள் ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித் தனியாக நடத்தப்பட்டன. ஆண்களுக்கு நான்கு பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றன.
நெல்லை மாணவர்கள்
10 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் நெல்லை விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த ஆதிமூலபெருமாள் என்ற ஆகாஷ் முதலிடமும், ஜெயேந்திரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் இரண்டாமிடமும், சின்மயா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த லோகேஷ் மூன்றாமிடமும் பெற்றனர்.
14 வயதுக்குட்பட்ட மாணவர்கள்
14 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் சின்மயா பள்ளியை சேர்ந்த கௌசிக் விக்டோ முதலிடமும், கிறிஸ்துராஜா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த சுஜித்கிருஷ்ணா இரண்டாமிடமும், பெல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் பெனடிக்டன் ரோஹித் மூன்றாமிடமும் பெற்றனர். 14 வயதுக்கு மேற்பட்டோருக்கான போட்டியில் விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் சேதுமாணிக்கவேல் முதலிடமும், இஸ்மான்சிங் இரண்டாமிடமும், அரவிந்த் மூன்றாமிடமும் பெற்றனர்.
தென்காசி மாணவர்
ஆண்களுக்கான பொதுப்பிரிவு போட்டியில் தென்காசி ஏ.எஸ்.பி. அரவிந்தன் முதலிடமும், வல்லத்தைச் சேர்ந்த குமார் இரண்டாமிடமும், பாவூர் சத்திரத்தை சேர்ந்த ஜம்புலிங்கம் மூன்றாமிடமும் பெற்றனர். பெண்களுக்கான போட்டியில் ஜெயேந்திரா மெட்ரிக் பள்ளியை சேர்ந்த ஸ்ரீநிதி முதலிடமும், விவேகானந்தா மெட்ரிக் பள்ளியைச் சேர்ந்த ஸ்ரீபிரியதர்ஷினி இரண்டா மிடமும், பெல் மெட்ரிக் பள்ளியைச் சேர்ந்த பெனிஷியா ஜோஸ்வின் மூன்றாமிடமும் பெற்றனர்.
நாய்கண்காட்சி
இன்று மாலை 3 மணிக்கு நாய் கண்காட்சி, 29ம் தேதி காலை 10 மணிக்கு கோலப்போட்டி மற்றும் கொழு கொழு குழந்தைகள் போட்டி நடைபெறுகிறது.
ஆணழகன் போட்டி
30ம் தேதி மதியம் 2 மணிக்கு சுற்றுச்சூழல் குறித்த ஓவியப் போட்டி, 31ம் தேதி காலை 10 மணிக்கு படகு போட்டியும், ஆகஸ்ட்1ம் தேதி மாலை 3 மணிக்கு ஆணழகன் போட்டி என பல்வேறு போட்டிகள் சாரல் திருவிழாவை முன்னிட்டு நடைபெறுகிறது.
மூன்று நாட்கள் மலர்கண்காட்சி
தோட்டக்கலைத்துறை சார்பில் ஐந்தருவி சுற்றுச்சூழல் பூங்காவில் 3 நாள் நடைபெறும் மலர், பழம், காய்கறி என தனித்தனியாக 3 கண்காட்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. காய்கறி-பழக் கண்காட்சியில் பொம்மை,பாம்பு, உள்ளிட்ட விலங்குகள் காய்கறிகள் பழங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
குவியும் பயணிகள்
ஆகஸ்ட் 2ஆம் தேதி மாலை 6 மணிக்கு சாரல் விழா நிறைவு பெறுகிறது. குற்றாலத்தில் சீசனை அனுபவிக்கவும், சாரல் திருவிழாவை பார்த்து ரசிக்கவும் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.