தள்ளுமுள்ளு, தடியடி, மோதலுக்கு இடையே வேட்புமனு தாக்கல் செய்த சரத்குமார்
திருச்செந்தூர்: திருச்செந்தூரில் வேட்பு மனு தாக்கல் செய்ய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் அதிமுகவினருடன் கூட்டமாக வந்ததால் அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
அதிமுக கூட்டணி சார்பில் திருச்செந்தூர் தொகுதியில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் போட்டியிடுகிறார். அவர் வேட்பு மனுவை தாக்கல் செய்வதற்காக சன்னதி தெருவில் இருந்து ஊர்வலமாக வந்தார். அவருடன் அதிமுகவினர், கூட்டணி கட்சியினரும் ஊர்வலமாக வந்ததாக கூறப்படுகிறது.
திருச்செந்தூர் பேருந்து நிலைய பகுதியில் டிஎஸ்பி கோபால் தலைமையிலான போலீசார் பேரிகார்ட் வைத்து அவர்களை தடுத்தனர். பேரிகார்டை தாண்டி வர முயன்ற தொண்டர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டினர். இதனால் போலீசாருக்கும், அதிமுகவினருக்கும் இடையே மோதல் வெடித்தது.
அப்போது பேருந்துக்காக காத்திருந்த பயணிகளையும் போலீசார் விரட்டினர். இதனால் போலீசாருடன் பயணிகள் கடும் வாக்குவாதம் செய்தனர். ஊருக்கு செல்ல பேருந்துக்காக காத்திருக்கிறோம். இங்கு நிற்காமல் வேறு எங்கே போவது என அவர்கள் போலீசாரை கண்டப்படி திட்டினர்.
சில முக்கிய நிர்வாகிகளுடன் மட்டும் சரத்குமார் அலுவலகத்திற்குள் சென்றார். மற்றவர்கள் பேருந்து நிலைய வாயிலில் நிறுத்தப்பட்டனர். இதனால் பேருந்துகள் நிலையத்திற்குள்ளேயும், வெளியேயும் செல்ல முடியவில்லை.
சரத்குமார் வேட்பு மனு தாக்கல் செய்யும் வரை போலீசாருக்கும், தொண்டர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டபடியே இருந்தது. வேட்பு மனு தாக்கல் முடிந்த பிறகே போலீசார் நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.