சின்னம்மா, நீங்க தான் அதிமுகவை வழிநடத்தணும்மா: சசியிடம் சரத்குமார் வேண்டுகோள்
சென்னை: அதிமுகவுக்கு தலைமை பொறுப்பேற்று கட்சியை வழிநடத்த வேண்டும் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் சசிகலாவிடம் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தனது மனைவி ராதிகாவுடன் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்திற்கு சென்றார். அங்கு வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் புகைப்படத்திற்கு அவர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்கள். சரத்குமார் சசிகலாவை சந்தித்து ஆறுதல் கூறினார். அதிமுகவுக்கு தலைமை பொறுப்பேற்று கட்சியை வழிநடத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
மாண்புமிகு புரட்சித் தலைவியின் வீட்டிற்கு இது போன்ற சூழலில் வந்திருப்பது வருத்தமாக உள்ளது. அவர் இறக்கவில்லை. நம்முடன் தான் இருக்கிறார். புரட்சித் தலைவி அம்மா அவர்கள் தமிழக மக்களின் இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
அவர் விட்டுச் சென்ற பணியை அவருடன் 33 ஆண்டுகளாக அன்பு சகோதரியாக இருந்த சின்னம்மா அவர்கள் வழி நடத்துவார் என்ற நம்பிக்கை உள்ளது.
அதிமுக தோழர்களும், தோழமை கட்சியினரும் அம்மா எந்த இலக்கை நோக்கி கடந்த தேர்தலில் பயணித்தார்களோ அதை முழுமையாக அடைய சின்னம்மா எடுக்கும் முடிவுகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அந்த நம்பிக்கையை நாம் சின்னம்மாவுக்கு கொடுக்க வேண்டும் என்றார்.