மோடியை விழுந்து விழுந்து பாராட்டும் ஜெயலலிதாவின் "இதயக்கனி" சரத்குமார்!
நாமக்கல்: பிரதமர் மோடியையும், அவரது ஆட்சியையும், திட்டங்களையும் வாயார பாராட்டியுள்ளார் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார்.
நாமக்கல் வந்த சரத்குமார் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், மத்திய பாஜக அரசு திட்டங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. பிரதமர் நரேந்திர மோடி நல்லெண்ண தூதுவராக நாடு முழுவதும் பயணம் செய்து வருவதால் பல்வேறு உலக நாடுகள் இந்தியாவில் வணிகம் செய்யும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
மேக் இன் இந்தியா போன்ற திட்டங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஏற்பட்டு வருகின்றன. உலக நாடுகள் இந்தியாவில் வணிகம் செய்யவேண்டும் என்ற எண்ணத்தை நரேந்திர மோடி ஏற்படுத்திவருகிறார்.
5-ஆவது முறையாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா முதலமைச்சராக பொறுப்பேற்பது ஆட்சிக்கு நல்ல வலிமையை ஏற்படுத்தும். மக்கள் நலத்திட்டங்கள், வளர்ச்சிப் பணிகள் மேம்படும். அவருக்கு அ.இ.ச.மக்கள் கட்சியின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். சொத்து குவிப்பு தீர்ப்பு குறித்து எதிர் கட்சிகள் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தால் அங்கும் வெற்றி பெறுவார்.
காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இந்த விவகாரத்தில் அரசியல் நோக்கோடு செயல்படுகின்றன. மக்களுக்காக எதுவும் செய்யவில்லை. ஒரே கருத்தாக தமிழகத்தில் 9-கட்சிகள் கூட்டணி அமைய வாய்ப்பில்லை. அதனால் மக்களுக்கு எவ்வித பயனும் இல்லை.
கல்விக் கடன்களை வங்கிகள் விரைந்து வழங்கவேண்டும். மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயர்கல்வி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதே அ.இ.ச.மக்கள் கட்சியின் கொள்கையாக உள்ளது. என்றார் அவர்.