"முட்டாள்" ஜெய்ராம் ரமேஷ்.. ஒட்டுமொத்தத் தமிழர்களும் கண்டிக்க சரத் அழைப்பு
சென்னை: ஜல்லிக்கட்டு நடைபெறுவதை காட்டுமிராண்டித்தனம் என்று கூறும் முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷை ஒட்டுமொத்தத் தமிழர்களும் ஒன்று திரண்டு கண்டிக்க வேண்டும் என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு பொங்கல் திருநாளில் நடை பெற இருப்பதை நினைத்து தமிழக மக்கள் மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள்.
ஏற்கனவே ஜல்லிக்கட்டுக்கு சட்டப்பூர்வ தடையை ஏற்படுத்தும் சூழலை உருவாக்கிய காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் மீண்டும் ஜல்லிக்கட்டு நடைபெறுவதை காட்டுமிராண்டித்தனம் என்று கூறுவது முட்டாள்தனம்.
ஜெய்ராம் ரமேசை காங்கிரஸ் கட்சியிலிருந்து சோனியாகாந்தி நீக்க வேண்டும். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்று தமிழர்களின் உணர்வுகளுக்கு எதிராக யார் பேசினாலும் ஒட்டுமொத்த தமிழர்களும் ஒன்று திரண்டு கண்டிக்க வேண்டும் என்று சரத்குமார் கூறியுள்ளார்.