யாருமே என்னை இதுவரை கூட்டணிக்கு கூப்பிடவில்லை... விரக்தியில் சரத்குமார்
சென்னை: அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், இதுவரை தன்னை எந்தக் கட்சியும் கூட்டணி குறித்துப் பேச அழைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் திமுக அழைத்தால் அதனுடன் கூட்டணி சேரவும் அவர் தயாராக இருக்கலாம் எனத் தெரிகிறது.
கடந்த சட்டசபைத் தேர்தலின் போது அதிமுக கூட்டணியில் சேர்ந்து போட்டியிட்டது சமக. தொடர்ந்து அதிமுக கூட்டணியிலேயே இருந்து முதலமைச்சரைப் பாராட்டி வந்த சமகவின் தலைவர் சரத்குமார், நேற்று அக்கூட்டணியில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்தார்.
இந்நிலையில்நாகர்கோவிலில் நேற்று நடைபெற்ற அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சட்டசபைத் தொகுதி தேர்தல் பணிக்குழு நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார் சரத்குமார்.
அப்போது அவர் பேசியதாவது:-
கூட்டணி தர்மம்...
மேலும், ‘நான் அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்றேன். அதனால் கூட்டணி தர்மத்திற்காக கடந்த 5 ஆண்டுகளாக அ.தி.மு.க.வுடன் இருந்தோம்.
மனசாட்சி...
பல சோதனைகள் இருந்தாலும் மற்ற கட்சிகள் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறிய நிலையிலும் சமத்துவ மக்கள் கட்சி அ.தி.மு.க. கூட்டணியிலேயே நிலைத்து இருந்தது. அதற்கு காரணம் மனசாட்சியும் கூட்டணி தர்மமும் ஆகும்.
கறிவேப்பிலை மாதிரி...
சட்டசபைத் தேர்தல், நாடாளுமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல் என 9 முறை அந்த இயக்கத்துக்காக நான் பிரசாரம் செய்து இருக்கிறேன். அதற்கு இந்த சரத்குமார் பயன்பட்டான். சாப்பாட்டில் போடக்கூடிய கறிவேப்பிலை மாதிரி பயன்படுத்தினர். அதை புரிவதற்கு எனக்கு காலதாமதம் ஆகிவிட்டது.
ஜால்ரா...
என்னை ஆளுங்கட்சிக்கு ஜால்ரா என்று சிலர் சொன்னார்கள். ஜால்ரா ஒரு பக்கவாத்திய கருவி. அதன் சுதி மாறினால் தாளம் மாறிவிடும். ஆகவே கடந்த 5 ஆண்டுகளாக நான் சுதி மாறாதவனாக இருந்திருக்கிறேன்.
சுயமரியாதை...
தற்போது என் தொண்டர்கள் என்னை வெளியே வரச் சொல்கிறார்கள். கண்டிப்பாக ஆளுங்கட்சியுடன் கூட்டணியில் இருக்க மாட்டேன். எனக்கென்று ஒரு மரியாதை இருக்கிறது" என்றார்.
அடுத்து திமுக?
இந்த கூட்டத்தை முடித்துக் கொண்டு தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் இன்று சென்னை வந்தார் சரத்குமார். அப்போது செய்தியாளர்களை அவர் சந்தித்தார். அப்போது, அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய நீங்கள் அடுத்து திமுகவுடன் கூட்டணி சேர்வீர்களா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், ‘சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடவே தொண்டர்கள் விரும்புகிறார்கள். கூட்டணி தொடர்பாக எந்த கட்சியிடமிருந்தும் எனக்கு அழைப்பு வரவில்லை. திமுகவுடன் இதுவரை பேச்சுவார்த்தை நடக்கவில்லை. யார் அழைத்தாலும் கூட்டணி குறித்து பேசுவோம்.
என்னுடைய குறிக்கோள்...
சமத்துவ மக்கள் கட்சிக்கென்று கொள்கைகள் கோட்பாடுகள் உண்டு. சமத்துவ மக்கள் கட்சி சார்பாக கூட்டணி பற்றி முடிவு எடுப்பதற்கு பொதுக் குழுவில் எனக்கு முழு அதிகாரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. நல்லமுறையில் சிறப்பாகவும் சமத்துவ மக்கள் கட்சியை வழிநடத்தவும் வளரச் செய்வதும் என்னுடைய குறிக்கோள்.
தேர்தல் அறிக்கை...
சட்டசபைத் தேர்தல் அறிக்கை தயார் செய்து வருகிறோம். தொண்டர்களிடம் விருப்பமனு வாங்கி இருக்கிறோம். மனுக்களை பரிசீலனை செய்து நல்ல முடிவு எடுக்கப்படும்.
புதிய திட்டங்கள்...
மக்கள் புதிய மாற்றத்தை எதிர்பார்ப்பது சகஜம். அப்போது தான் புதிய ஆட்சியாளர்கள் மக்களுக்காக புதிய திட்டங்களை வகுப்பார்கள்.
கூட்டணி குறித்து ஆலோசனை...
சமத்துவ மக்கள் நல்லாட்சி தரும். பொதுக்குழுவில் கூட்டணி பற்றி முடிவு எடுப்பதற்கு எனக்கு அதிகாரம் கொடுத்து இருக்கிறார்கள். அதுபோல எங்கள் கட்சியின் மாவட்ட செயலாளர்களிடம் கருத்துகணிப்பு கேட்டு இருக்கிறோம். யாருக்கு ஆதரவு தரவேண்டும். யாருடன் கூட்டணி அமைக்க வேண்டும் தனித்து போட்டியிடுவதா? என்று ஆலோசனை செய்து நல்ல முடிவு எடுப்போம்.
அதிமுகவுக்காக பிரச்சாரம்...
நான் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்தேன். உண்மையாக நானும் தொண்டர்களும் எங்களுடைய உழைப்பை தந்து இருக்கிறோம். இந்த கூட்டணிக்காக சட்டசபை, நாடாளுமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல்களில் பிரசாரம் செய்து இருக்கிறோம்.
இலவசங்கள் கிடையாது...
சமத்துவ மக்கள் கட்சி வளராமல் இருப்பதற்கு கூட்டணிதான் காரணம். எங்கள் தேர்தல் அறிக்கையில் இலவசங்கள் கண்டிப்பாக கிடையாது.
வீட்டிற்கொரு விவசாயி...
கட்டாய கல்வி முறையை அமல்படுத்துவோம். வீட்டிற்கு ஒரு விவசாயி என்ற திட்டத்தை கொண்டு வருவோம். பூரண மதுவிலக்கை அமல்படுத்துவோம்' என்றார்.
பதவியில் நீடிப்பு...
இன்னும் சரத்குமார் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வென்ற எம்.எல்.ஏ. பதவியில் தொடர்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ப்ளாஷ்பேக்...
சில ஆண்டுகளுக்கு முன்பு திமுகவில் சேர்ந்த சரத்குமார், பின்னர் அங்கிருந்து வெளியேறினார். அப்போது அவர் கருணாநிதிக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அதில், "தங்களால் ஈர்க்கப்பட்டு தங்களது இயக்கத்திலும் 1998 -ம் ஆண்டு அடிப்படை உறுப்பினராக இணைந்தேன். எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் இயக்கத்திற்கு நான் ஊறு விளைவித்ததில்லை என்பதனை இவ்வுலகமே அறியும். இது ஒருபுறம் இருக்க எத்தனையோ சந்தர்ப்பங்களில் தங்களைச் சார்ந்த சிலரே என்னை அவமானத்திற்கு உள்ளாக்கியிருக்கிறார்கள்.
அடிமைகளே தேவை...
சுயமரியாதை உணர்வுகளோ, கருத்துச் சுதந்திரமோ இல்லாதவன் மனிதனே அல்ல என்பது என் கருத்து. தங்களது இயக்கத்திலோ, தற்போது அவற்றுக்கு வரவேற்பு இல்லை, வாய்மையும் பேசாத, வாயும் பேசாத அடிமைகளே தேவைப்படுகிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் நான் இயக்கத்தில் இருந்து விடுவித்துக் கொள்வதுதான் எனக்கு ஒரே வழி.
அரசியல் பாடம்...
இதுகாலம் வரை தங்களிடம் கற்ற அரசியல் பாடம், என்னை வளர்த்த ரசிகர்களும், தாய்மார்களும், நண்பர்களும், கலை உலகத் தோழர்களும், என்னைச் சார்ந்த சமுதாயமும், தமிழக மக்களும் இனி எனது அரசியல் வாழ்க்கைக்கு துணை நிற்பர். தமிழக மக்கள் என்னை அவர்கள் மடியில் விழுந்த பிள்ளையைப் போல கருதி, நான்பட்ட காயங்களுக்கு மருந்திட்டு விட்ட பணிகளைத் தொடர எனக்கு வழிகாட்டுவார்கள் என்ற நம்பிக்கை நிச்சயம் எனக்கு உண்டு. எனவே என்னை தங்களது இயக்கத்தில் இருந்து விடுவித்துக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
திமுகவுடன் கூட்டணி...?
இப்படிப் பேசி திமுகவில் இருந்து வெளியேறி அதிமுக கூட்டணியில் இணைந்த சரத்குமார், தற்போது யார் கூட்டணிக்கு அழைத்தாலும் பேசுவோம் எனக் கூறியுள்ளார். ஏற்கனவே திமுக கூட்டணியின் வாசல் திறந்திருப்பதாக அக்கட்சி கூறியுள்ள நிலையில், சரத்குமார் இவ்வாறு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் சரத்குமார் மீண்டும் திமுகவுடன் இணையலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தனித்துப் போட்டி..?
ஒருவேளை தொண்டர்களின் விருப்பப்படி தனித்துப் போட்டியிடும் முடிவையோ, அல்லது மக்கள் நலக்கூட்டணியிலோ சரத்குமார் சேரக்கூடும். சரத்குமார் என்ன முடிவெடுக்கிறார் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.