ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் போட்டியும் இல்லை, யாருக்கும் ஆதரவும் இல்லை : சரத்குமார்
ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் போட்டியும் இல்லை, யாருக்கும் ஆதரவும் இல்லை என சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார்.
சென்னை : ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் தனது அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடப் போவது இல்லை என்று அந்த கட்சியின் தலைவர் சரத்குமார் அறிவித்து உள்ளார்.
ஆர்.கே நகருக்கு வரும் 21ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே, கடந்த ஏப்ரல் மாதம் நடக்க இருந்த தேர்தல், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடந்ததாகக் கூறி ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், இந்தத் தேர்தலில் தனது கட்சி சார்பில் யாரும் போட்டியிடப் போவது இல்லை என்று அறிவித்து உள்ளார். மேலும், தனக்கும், அ.தி.மு.க.,வுக்குமான கூட்டணி 2011ம் ஆண்டே முறிந்து விட்டதாகவும் அவர் தெரிவித்து உள்ளார்.
கடந்த முறை ஆர்.கே. நகருக்கு தேர்தல் அறிவிக்கப்பட்ட போது, தினகரனை ஆதரித்து தொப்பி சின்னத்திற்கு பிரச்சாரம் செய்ததாகவும், இந்த முறை இரட்டை இலைக்கு பிரச்சாரம் செய்ய முடியாது என்றும், தற்போதைய அ.தி.மு.க சூழ்நிலைக்கு தகுந்தாற்போல, முடிவை மாற்றிக்கொள்வது போல் தன்னால் மாற்றிக்கொள்ள முடியாது என்றும் சரத் குமார் தெரிவித்து உள்ளார்.
இப்படி மாறி மாறி பிரச்சாரம் செய்வதை தனது மனசாட்சி ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், நிறம் அரசியலுக்கு தமது சுயமரியாதையும், தன்மானமும் இடம்கொடுக்காது என்றும் அவர் தெரிவித்து உள்ளார். மேலும், இனி வரவிருக்கும் தேர்தல்களை மனதில் வைத்து அதற்கேற்ற செயல்திட்டங்கள் வகுக்கப்படும் என்றும் சரத்குமார் அந்த அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.