ரஜினியை தேசதுரோக வழக்கில் கைது செய்க- சரத்குமார் ஆவேசம்
ரஜினியை தேசதுரோக வழக்கில் கைது செய்ய வேண்டும் என்று சரத்குமார் ஆவேசமாக தெரிவித்தார்.
சென்னை: தூத்துக்குடியில் மக்கள் போராட்டத்துக்கு எதிராக கருத்து கூறிய ரஜினியை தேச துரோக வழக்கின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று சரத்குமார் தெரிவித்தார்.
தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூட்டில் பலியான குடும்பத்தினரையும் காயமடைந்தவர்களை நேற்று ரஜினிகாந்த் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது அவர் பேசுகையில் மக்கள் எல்லாவற்றுக்கும் போராடுவதை நிறுத்த வேண்டும்.
தமிழகமே சுடுகாடு
மக்கள் போராட்டத்தில் சில சமூகவிரோதிகள் நுழைந்து வன்முறையை தூண்டிவிட்டனர். போராட்டம் போராட்டம் என்று கூறினால் தமிழகமே சுடுகாடாகிவிடும் என்று தெரிவித்தார்.
சட்டம்- ஒழுங்கு
இதற்கு சமூகவலைதளங்களில் ரஜினிக்கு எதிராக கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் இதுகுறித்து சரத்குமார் கூறுகையில் தமிழகம் போராட்டக்களமாக மாறி சுடுகாடாக மாறிவிடும் என்கிறார். அப்படியென்றால் தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு இல்லை என்று கூறுகிறாரா?
பிரச்சினையை சரி செய்வது
மனிதனுக்கு போராட உரிமை இல்லையா? தூத்துக்குடி வன்முறைக்கு சமூக விரோதிகளே காரணம் என ரஜினி கூறியது கண்டனத்துக்குரியது. அரசியலமைப்பு சட்டத்தில் பேச்சுரிமை, போராட்ட உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. பிரச்னையை சரி செய்வதை விட்டுவிட்டு மக்களைக் கட்டுப்படுத்த முயலக்கூடாது.
தேச துரோக வழக்கு
ரஜினியின் பேச்சு மக்கள் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் உள்ளது. அவர் மீது உடனடியாக தேச துரோக வழக்குப் பதிய வேண்டும் என்றார் சரத்குமார்.