திடீர் உடல்நலக்குறைவு... சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினார் சரத்குமார்
சென்னை: நடிகரும், சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமார் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சிகிச்சைக்குப்பின் அவர் வீடு திரும்பினார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நாயகர்களுள் ஒருவராக வலம் வந்தவர் நடிகர் சரத்குமார். தற்போது அவர் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவராக இருக்கிறார். நடிகர் சங்கத்தின் தலைவராகவும், தென்காசி சட்டசபை உறுப்பினராகவும் இவர் பதவி வகித்துள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தலின் போது, மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்த சரத்குமார், இரட்டை இலைச் சின்னத்திலேயே திருச்செந்தூரில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். நடிகர் சங்கத் தேர்தல், சட்டசபைத் தேர்தல் என அடுத்தடுத்து தோல்வியைச் சந்தித்து வருகிறார் சரத்குமார்.
இந்நிலையில், இன்று காலை திடீரென அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. நெஞ்சுவலியால் அவதிப்பட்ட அவரை உடனடியாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக குடும்பத்தினர் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார்.