திருச்செந்தூர் முருகனை தரிசித்து பிரச்சாரத்தைத் தொடங்கினார் சரத்குமார்
சென்னை: திருச்செந்தூரில் முருகப் பெருமானை தரிசித்து விட்டு தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித்தலைவர் சரத்குமார்.
சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடுகிறது. 234 தொகுதிகளிலும் இன்று ஒரே நேரத்தில் தேர்தல் பணிமனையை திறந்து பிரச்சாரத்தை அதிமுகவினர் தொடங்கியுள்ளனர்.
இன்று அதிகாலையில் சரத்குமார், தனது மனைவி ராதிகாவுடன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
இதனையடுத்து, திருச்செந்தூரில் சன்னதி தெருவில் தலைமை தேர்தல் பணிமனையை திறந்து வைத்த சரத்குமார் பிரசாரத்தை தொடங்கினார்.
முதலமைச்சர் ஜெயலலிதா மீண்டும் ஆட்சியில் அமர பாடுபட வேண்டும் என்றும் அவர் தொண்டர்களை கேட்டுக்கொண்டார்.
செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், முதல்வர் ஜெயலலிதா ஆட்சி தொடர வேண்டும் என்பதற்காக தான் அ.தி.மு.கவுடன் சமத்துவ மக்கள் கட்சி கூட்டணி வைத்துள்ளது. 234 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் என்று சரத்குமார் தெரிவித்தார்.