காவிரி மேலாண்மை வாரியம்.. சரத்குமார் தலைமையில் சமத்துவ மக்கள் கட்சியினர் உண்ணாவிரதம்
காவிரி மேலாண்மை வாரியம் வேண்டி சரத்குமார் கட்சி சார்பில் சேப்பாக்கத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்து வருகிறது.
Recommended Video
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும், உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்ககோரியும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியினர் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டுவருகின்றனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்ககோரி தமிழகத்தில் விவசாய அமைப்புகள், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராடிக்கொண்டு இருக்கும் நிலையில், மத்திய அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனையடுத்து சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து சென்னை சேப்பாக்கத்தில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடந்து வருகிறது.
இதில் பேசிய சரத்குமார், மத்திய அரசு தமிழக அரசை தொடர்ந்து வஞ்சிக்கிறது. இதற்கு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து அரசியல் பாகுபாடுகளை மறந்து போராட வேண்டியுள்ளது.
காவிரி என்பது தமிழர் உரிமை எனவே, அதை பாதுகாக்க அரசியல் களைந்து தமிழர் என்கிற இன உணர்வோடு ஒவ்வொருவரும் போராடவேண்டும். தமிழக மக்களின் மனவோட்டத்தை மத்திய அரசுக்கு எடுத்துரைக்க வேண்டும்.
அதற்காகவே சமத்துவ மக்கள் கட்சி சார்பில் இந்தப் போராட்டம் துவங்கப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை சமத்துவ மக்கள் கட்சி சார்பில் தொடர்ந்து போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
சரத்குமாரின் இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் நேரில் ஆதரவு அளித்துள்ளனர். மேலும், இந்த போராட்டத்திற்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.