சரத்குமாரும் தினகரன் பக்கம் சாஞ்சுட்டாராமே... ச.ம.க வேட்பு மனு தள்ளுபடியானது ஏன்?
ஆர்கே நகர் தொகுதி இடைத் தேர்தலில் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர் மனு தள்ளுபடி செய்யப்பட்டதன் பின்னணி குறித்து பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னை: ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர் மனு தள்ளுபடி செய்யப்பட்டதில் பெரிய நாடகமே அரங்கேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழகமே பெரும் எதிர்பார்ப்புடன் ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத் தேர்தல் ஏப்ரல் 12-ந் தேதி நடைபெற உள்ளது. இத்தொகுதியில் நடிகர் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியின் வேட்பாளராக அந்தோணி சேவியர் அறிவிக்கப்பட்டார். மாற்று வேட்பாளராக விஜயன் அறிவிக்கப்பட்டார்.
இருவரது மனுக்களும் நிராகரிப்பு
வேட்புமனுக்கள் பரிசீலனையின் போது இருவரது மனுக்களுமே நிராகரிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் திட்டமிட்டே தமது கட்சியினரின் வேட்புமனுக்களை நிராகரிக்கும் வகையில் சரத்குமார் செயல்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நாடார் சமூக வாக்குகள்
ஆர்.கே.நகர் தொகுதியில் 40,000க்கும் மேற்பட்ட நாடார் சமூக வாக்குகள் உள்ளன. இந்த வாக்குகளை அள்ளுவதற்கு திமுக வியூகம் வகுத்து செயல்படுகிறது. சரத்குமாரின் ஆதரவை கோரும் முயற்சியில் ஓபிஎஸ் அணியும் தினகரன் கோஷ்டியும் தீவிரம் காட்டியது.
நாடகம் அரங்கேற்றம்
ஆனால் டிடிவி தினகரன் கோஷ்டி சரத்குமார் தரப்புடன் பேரம் பேசி வளைத்துவிட்டதாக கூறப்படுகிறது. அதனால்தான் போட்டியிடுவது போல் வேட்புமனுவை தாக்கல் செய்து அந்த மனு தள்ளுபடியாக வேண்டும் என்பதற்காகவே ஒரு நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர் என கூறப்படுகிறது.
நெருக்கடியில்...
அதுவும் மாற்று வேட்பாளர் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டதால்தான் இந்த சந்தேகம் உறுதிப்படுத்தப்படுவதாக அடித்து சொல்கிறது ஓபிஎஸ் அணி. ஜெயலலிதா மறைந்த நிலையில், சசிகலாவும் சிறைக்குப் போய்விட்ட சூழலில் எப்படியும் வென்றாக வேண்டும் என்ற பேராசையில் தினகரன் கோஷ்டி அரங்கேற்றும் நாடகம்தான் இது எனவும் கூறப்படுகிறது.