எம்பிக்கான பென்ஷன் எனக்கு வேண்டாம்.. ராஜ்யசபா செயலருக்கு சரத்குமார் கடிதம்!
எம்பிக்கான பென்ஷன் தொகை இனி தனக்கு வேண்டாம் என சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் மாநிலங்களவை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார்
சென்னை: எம்பிக்கான பென்ஷன் தொகை இனி தனக்கு வேண்டாம் என சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் மாநிலங்களவை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
சமத்துவமக்கள் கட்சித் தலைவரான சரத்குமார் 2002ஆம் ஆண்டு திமுக சார்பில் ராஜ்ஜிய சபா உறுப்பினராக்கப்பட்டார். ஆனால் 2006ஆம் ஆண்டு கட்சித் தலைவர்களுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக கட்சியிலிருந்து வெளியேறினார்.
இதையடுத்து முன்னாள் எம்பிக்கான ஓய்வூதியம் சரத்குமாருக்கு வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தனக்கு வழங்கப்படும் முன்னாள் எம்.பி.க்கான ஓய்வூதியத்தை நிறுத்தக்கோரி மாநிலங்களவை செயலாளருக்கு சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கடிதம் எழுதியுள்ளார்.
பிறவழிகளில் வருவாய் பெறும் மக்கள் பிரதிநிதிகளுக்கு ஓய்வூதியத்தை நிறுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். வசதி உள்ளவர்கள் ஓய்வூதியத்தை விட்டுத்தந்தால் அரசுக்கு பலகோடி ரூபாய் சேமிப்பு ஏற்படும் என்றும் ஒரு சில மக்கள் பிரதிநிதிகள் மட்டுமே ஓய்வூதியத்தை நம்பியுள்ளனர் என்று சரத்குமார் கூறியுள்ளார்.