தி.நகர் சரவண ஸ்டோர்ஸ் ஊழியர் ஜோசப் விஷம் குடித்துத் தற்கொலை
சென்னை தி. நகர் சரவணா ஸ்டோர்ஸ் ஊழியர் ஜோசப் என்பவர் ஊழியர்கள் விடுதியில் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை: சென்னை தியாகராய நகரில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தில் வேலை செய்து வந்த ஊழியர் ஜோசப் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்தத் தற்கொலை குறித்து சென்னை பாண்டிபஜார் காவல்நிலைய போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சரவணா ஸ்டோரில் ஊழியர்கள் தற்கொலை செய்து கொள்வது தொடர்கதையாகி வருகிறது. பல பேர் இங்கு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ரம்யா அதே கடையில் வேலை பார்த்து வந்த திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சுரேந்தர் என்பவரை காதலித்தார்.
இருவருக்கும் பிரச்சினை ஏற்படவே விரக்தியில் ரம்யா விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக மாம்பலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று ஜோசப் என்ற ஊழியர் தற்கொலை செய்துள்ளார். அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்தவர் ஜோசப். தி.நகரில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். ஊழியர்கள் தங்கும் விடுதியில் தங்கி வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் அவர் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ஜோசப் தற்கொலைக்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை. இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.