அதிமுகவில் மீண்டும் என்னை சேர்க்க ஜெ. விரும்பினார்-சசி நிறைவேற்றினார்: 'அள்ளிவிடும்' டிடிவி தினகரன்
ஜெயலலிதாவின் எண்ணத்தை நிறைவேற்ற சசிகலா எனக்கு பதவி கொடுத்தார் என அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஜெயலலிதாவின் எண்ணத்தை நிறைவேற்ற சசிகலா தமக்கு பதவி கொடுத்தார் என அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்து வந்த பிறகு தம்மை மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொள்ளும் முடிவில் இருந்தார் என்றும் தினகரன் கூறியுள்ளார்.
ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட தனது குடும்பத்தினரை அவரது மறைவுக்குப் பிறகு சசிகலா மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொண்டார். அதிமுக தங்கள் குடும்பத்தினரின் கட்டுப்பாட்டில் தான் இருக்க வேண்டும் என எண்ணிய சசிகலா, டிடிவி.தினகரனுக்கு துணைப் பொதுச்செயலாளர் பதவியை வழங்கினார்.
இதனால் அதிமுகவில் சசி குடும்பத்தின் ஆதிக்கம் இருப்பது வெளிப்படையாக தெரிந்தது. இது அதிமுகவினர் மட்டுமின்றி தமிழக மக்களிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நெறியாளரின் கேள்வி
இந்நிலையில் தந்தி டிவியின் கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியில் அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் பங்கேற்றார். அப்போது நெறியாளர் பாண்டே கட்சியில் இருந்து நீக்கப்பட்ட இந்த 6 ஆண்டுகளில் ஜெயலலிதா உங்களை மீண்டும் அழைக்கவேயில்லை என்றார்.
பலமுறை ஜெ.வை சந்தித்துள்ளேன்
அதற்கு பதிலளித்த தினகரன், 6 ஆண்டுகள் அல்ல 5 ஆண்டுகள் தான் என்றார். கட்சியில் இருந்து நீக்கப்பட்ட 5 ஆண்டுகளில் ஜெயலலிதாவை நான் அரசியல் அல்லாத பல விஷயங்களுக்காக ஜெயலலிதாவை நேரில் சந்தித்துள்ளேன் என்றும் டிடிவி.தினகரன் கூறினார்.
மீண்டும் கட்சியில் சேர்க்க திட்டம்
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது நான் அவரை பார்க்க சென்றிருந்தேன். அப்போது ஜெயலலிதா என்னை மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொள்ளும் எண்ணத்தில் இருப்பதாக எனது சசிகலா தெரிவித்தார்.
ஜெ.உயிரோடு இருந்திருந்தால்
ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்து திரும்பியதும் என்னை கட்சியில் சேர்த்துக்கொள்ள இருப்பதாகவும் சசிகலா என்னிடம் கூறினார். ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் அவர் நிச்சயம் என்னை கட்சியில் சேர்த்திருந்துப்பார் என்றும் டிடிவி தினகரன் கூறினார்.
ஜெ.எண்ணத்தை நிறைவேற்றவே பதவி
அவரது எண்ணத்தை நிறைவேற்றவே சசிகலா எனக்கு துணைப் பொதுச்செயலாளர் பதவி கொடுத்தார் என்றும் தினகரன் கூறினார். கட்சியில் இருந்து நீக்கிய ஜெயலலிதா தற்போது உயிரோடு இல்லை. அதனால் தினகரன் என்ன வேண்டுமானாலும் கூறிக்கொள்ளலாமா? என்பது அதிமுக தொண்டர்களின் குமுறல்.