முதல் மனைவிக்கு வந்த பணத்தில் எனக்கும் பங்கு வேண்டும்.. சசிபெருமாள் 2வது மனைவி போலீசில் புகார்
சேலம்: அரசியல் கட்சி தலைவர்கள் கொடுத்த பணத்தில் ஒரு தொகையை, எனது கணவரின் முதல் மனைவியின் மகன்களிடமிருந்து பெற்று தர வேண்டும் என சசிபெருமாளின் 2-வது மனைவி சேலம் மாவட்ட எஸ்.பியிடம் புகார் அளித்துள்ளார்.
சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகிலுள்ள மேட்டுக்காடு பகுதியைச் சேர்ந்தவர் சசி பெருமாள். மதுவுக்கு எதிராக தீவிர போராட்டம் நடத்தி வந்தவர். கடந்த ஆண்டு ஜூலை-31 ஆம் தேதியன்று, கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகிலுள்ள உண்ணாமலைக்கடை என்ற இடத்தில் இருந்த தமிழக அரசின் "டாஸ்மாக்" மதுக்கடையை மூடவேண்டும் என்று நடந்த போராட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது, அங்கிருந்த செல்போன் கோபுரத்தின் மீது ஏறி போராட்டம் நடத்தியதில் அவர் உயிரிழந்தார்.
உயிரிழந்த சசிபெருமாளின் முதல் மனைவிக்கு விவேக், நவநீதன் என்ற இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் அவரது, இரண்டாவது மனைவி அகிலம் நேற்று சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அமித்குமார் சிங்கிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில்,
எனது கணவர் சசிபெருமாள் மதுவுக்கு எதிராகவும், டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தியும் போராடி வந்தார். இதையடுத்து 31.7.2015 அன்று கன்னியாகுமரியில் மதுவுக்கு எதிராக டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி செல்போன் டவரில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டபோது உயிரிழந்தார்.
இதைத்தொடர்ந்து எங்கள் வீட்டிற்கு வந்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்திய அரசியல் கட்சி தலைவர்கள் பலரும், எங்கள் குடும்பத்துக்கு ரூ.35-இலட்சம் நிதி உதவி வழங்கினார்கள்.
அந்த பணத்தை எல்லாம் சசிபெருமாளின் முதல் மனைவியின் மகன்கள் விவேக், நவநீதன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். அந்த பணத்தை எல்லாம் அவர்களே வைத்துக்கொண்டு எனக்கு ஒரு ரூபாய் கூட தரவில்லை.
இந்த நிலையில், எனது ஒரே குழந்தை கவிபிரியாவுடன் நான் வறுமையில் வாடுகிறேன். என் கணவருக்காக அரசியல் கட்சி தலைவர்கள் கொடுத்த பணத்தில் எனக்கு ஒரு தொகையை, என கணவரின் முதல் மனைவியின் மகன்களிடமிருந்து பெற்று தருமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.