சசிபெருமாளின் உடல் பிரேத பரிசோதனை இன்று ஒத்திவைப்பு... உறவினர்கள் கேட்டுக்கொண்டதால் நடவடிக்கை
கன்னியாகுமரி : டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி போராட்டம் நடத்திய போது இறந்து போன சசிபெருமாளின் உடல் பிரேத பரிசோதனை இன்று நடைபெறும் என போலீசார் அறிவித்துள்ளனர்.
தேசிய மக்கள் கூட்டமைப்பின் தலைவரும், காந்தியவாதியுமான சசிபெருமாள் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உண்ணாமலைக்கடை பகுதியில் இயங்கி வந்த டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர் திடீரென 200 அடி உயரமுள்ள செல்போன் டவரில் ஏறிப் போராட்டம் நடத்திய போது, உடல் நிலை திடீரென்று பாதிக்கப்பட்டு ரத்த வாந்தி எடுத்த நிலையில் மயங்கினார்.
டவரின் மீதிருந்து மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
அவரது மறைவுக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி, மு.க.ஸ்டாலின், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கலும், கண்டனமும் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே சசி பெருமாள் உடல் ஆசாரிப்பள்ளம் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. இன்றே பிரேத பரிசோதனை நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் உறவினர்கள் கேட்டுக்கொண்டதால், இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, சசிபெருமாள் உடல் வைக்கப்பட்டுள்ள ஆசாரிப்பள்ளம் மருத்துவமனை மற்றும் அவரது சொந்த கிராமத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.