சசிபெருமாள் மகனுக்கு ராகுல்காந்தி கடிதம்... காங்கிரஸ் சார்பில் ரூ. 5 லட்சம் நிதியுதவி
சென்னை: காந்தியவாதி சசிபெருமாள் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, அவரது மகன் விவேக்கிற்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி கடிதம் அனுப்பியுள்ளார்.
மார்த்தாண்டம் அருகே டாஸ்மாக் கடையை மூடக் கோரி செல்போன் கோபுரம் மீது ஏறி போராடிய போது, உடல் நலக் குறைவு ஏற்பட்டு காந்தியவாதி சசிபெருமாள் உயிரிழந்தார். அவரது மரணத்திற்குப் பின்னர் தமிழகத்தில் மதுவிற்கு எதிரான போராட்டங்கள் வலுத்துள்ளது.
இந்நிலையில், காந்தியவாதி சசி பெருமாள் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, சேலத்தில் உள்ள அவருடைய மகன் விவேக்கிற்கு, காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல்காந்தி கடிதம் அனுப்பி உள்ளார்.
அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:-
மாநிலத்தில் உள்ள மதுகடைகளுக்கு எதிராக போராட்டம் நடத்தியபோது சசி பெருமாளின் துரதிருஷ்டமாக மரணம் குறித்து ஆழ்ந்த துயருற்றேன்.
காந்தியவாதியான சசி பெருமாள் தன் வாழ்க்கை முழுவதையுமே மது கொடுமைகளுக்கு எதிராக போராடியவர். எந்த நோக்கத்துக்காக அவர் வாழ்ந்து மறைந்தாரோ அதை முழுமையான வகையில் எடுத்துக்கொண்ட உங்கள் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த துயரமான நேரத்தில் என் நினைவுகளும், பிரார்த்தனை களும் உங்களோடும், உங்கள் குடும்பத்தோடும் இருக்கிறது' என இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "காங்கிரஸ் கட்சி துணைத்தலைவர் ராகுல்காந்தி, காந்தியவாதி சசிபெருமாள் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்து, அவருடைய மகனுக்கு கடிதம் அனுப்பி இருக்கிறார். காங்கிரஸ் கட்சி சார்பில் காந்தியவாதி சசிபெருமாள் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படுகிறது' என்றார்.