கொட்டும் மழையில் உண்ணாவிரதம் இருக்கும் சசிபெருமாள் குடும்பம் - இன்று 4வது நாள்!
சேலம்: மதுவிற்கு எதிரான போரட்டத்தின் போதே உயிரிழந்த காந்தியவாதி சசிபெருமாளின் குடும்பத்தினர் நேற்று 3வது நாளாக கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் உண்ணாவிரதம் இருந்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகே உள்ள உண்ணாமலைக்கடையில் இருந்த டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி நடந்த போராட்டத்தில் காந்தியவாதி சசிபெருமாள் உயிரிழந்தார். அவரது திடீர் மரணம் தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், சசிபெருமாள் உடலை வாங்க ஆசாரிபள்ளம் சென்ற அவரது மனைவி மற்றும் மகன், தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தினால்தான் உடலை பெற்றுக் கொள்வோம் என்று கூறிவிட்டனர். அவர்களுடன் மாவட்ட நிர்வாகம் நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்தது. இதனால் அவர்கள் சொந்த ஊர் திரும்பினர்.
இதனிடையே, சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே உள்ள இ. மேட்டுக்காடு கிராமத்தில் சசிபெருமாளின் மனைவி மகிலம், மகள் கவியரசி, மகன்கள் விவேக், நவநீதன் மற்றும் ஊர் மக்கள் கொட்டும் மழையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் அவர்கள் அனைவரும் இன்றும் 4வது நாளாக தங்களது போராட்டத்தினை தொடர்ந்து வருகின்றனர். மேலும், தமிழக அரசின் கவனத்தினை ஈர்க்கும் வகையில் இன்று தங்களுடைய கண்களைக் கட்டிக் கொண்டு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சசிபெருமாளது மகன் விவேக்கின் உடல்நிலை தொடர்ந்து உண்ணாவிரதத்தால் மோசமடைந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.