திண்டுக்கல் சீனிவாசனை முதல்வராக்க சசிகலா திடீர் திட்டம்?
முதல்வர் பதவியில் தான் அமர சிக்கல் உள்ளதால் திண்டுக்கல் சீனிவாசனை முன்னிறுத்த சசிகலா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை: பிரச்சினையை சரி செய்ய என்ன செய்யலாம் என்பதில் சசிகலா தரப்பு படு துரிதமாக இருக்கிறது. ஒவ்வொரு ஆப்ஷனாக அது பரீட்சித்து வருகிறது. அந்த வகையல் தற்போது முதல்வராக திண்டுக்கல் சீனிவாசனை நிறுத்தலாமா என்ற திட்டத்தில் உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் ஒரு நிமிடத்தைக் கூட வீணடிக்கவில்லை சசிகலா தரப்பு. படு வேகமாக காய்களை நகர்த்திக் கொண்டிருக்கிறது. முதலில் பொதுச் செயலாளர் பதவியைப் பிடித்தார் சசிகலா. அடுத்து முதல்வர் பதவியை நோக்கி நகர ஆரம்பித்தார். அதில்தான் சிக்கல் வந்தது. முடிந்தவரை முட்டுக் கொடுத்துப் பார்த்த முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஒரு கட்டத்தில் புரட்சியில் குதித்து விட்டார். இதனால் சசிகலாவின் முதல்வர் கனவு அப்படியே ஸ்தம்பித்துப் போய் நிற்கிறது.
தான் முதல்வராவதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதை உணர்ந்துள்ள சசிகலா அதை சமாளிக்க என்னவெல்லாம் செய்ய முடியும் என்று யோசித்து ஒவ்வொரு காயாக நகர்த்திக் கொண்டிருக்கிறார்.
செங்கோட்டையன்
தனக்குப் பதில் கே.ஏ. செங்கோட்டையனை முதல்வராக நிறுத்த அவர் தீர்மானித்தார். இப்போதைக்கு செங்கோட்டையனை முதல்வராக்கி விட்டு பிறகு தான் பதவிக்கு வந்து விடலாம் என்பது அவரது திட்டம்.
சீனியர்கள் போர்க்கொடி
ஆனால் செல்லூர் ராஜு உள்ளிட்ட பல்வேறு சீனியர்களுக்கும் அது பிடிக்கவில்லை. கொந்தளித்து விட்டனர். செங்கோட்டையனையும் பிடித்து தாறுமாறாக ஏசி விட்டனராம். இதனால் சசிகலாவின் இந்தத் திட்டம் புஸ்வாணமாகி விட்டது.
செங்கோட்டையன் ஷாக்
செங்கோட்டையன் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியவர். குறிப்பாக பெண் விவகாரத்தில் இவர் பெயர் பெரிய அளவில் நாறியது. இதனால்தான் ஜெயலலிதா இவரை தூக்கிப் போட்டு விட்டார். ஆனால் தனக்கு சரியான சர்க்கஸ் பொம்மையாக இவர் இருப்பார் என்று சசிகலா நினைத்து மீண்டும் பொறுப்புகொடுத்தார். ஆனால் தனக்கு கிளம்பிய எதிர்ப்பைக் கண்டு பயந்து போய் விட்டாராம் செங்கோட்டையன்.
திண்டுக்கல் சீனிவாசன்
இந்த நிலையில் தற்போது திண்டுக்கல் சீனிவாசன் பக்கம் தனது பார்வையைத் திருப்பியுள்ளார் சசிகலா. இவரும் சசிகலா சமூகத்தைச் சேர்ந்தவர்தான். கட்சியின் பொருளாளர் பதவியில் தற்போது அமர்த்தப்பட்டுள்ளவர் (சட்டப்படி இது செல்லாது என்றாலும் கூட). இவரைத்தான் முதல்வர் பதவிக்கு தற்போது முடிவு செய்து வைத்துள்ளாராம் சசிகலா.
மீண்டும் கூவத்தூர் பயணம்
இந்த புதிய திட்டத்துடன்தான் இன்று மீண்டும் கூவத்தூருக்கு சசிகலா பயணம் மேற்கொண்டுள்ளதாக கூறுகின்றனர். திண்டுக்கல் சீனிவாசனை முன்னிறுத்தப் போகிறேன். அவரை ஆட்சியமைக்க ஆளுநர் தரப்பிலிருந்து பிரச்சினை வராது. எனவே ஓரிரு நாளில் பிரச்சினை தீரும். அதுவரை பொறுமையாக இருங்கள் என்று அதிமுக எம்.எல்.ஏக்களிடம் சொல்லப் போகிறாராம் சசிகலா.
எடப்படியால் இடக்கு வருமா
ஆனால் சீனிவாசனை எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட கொங்கு மண்டலத் தலைவர்கள் ஏற்பார்களா என்பது பெரும் கேள்விக்குறியாகியுள்ளது. எடப்பாடி ஆரம்பத்திலிருந்தே அமைதியாக இருக்கிறார். தனக்கு சரிப்பட்டு வராது என்று தோன்றினால் அவரும் புரட்சியில் குதிக்கலாம் என்ற சந்தேகமும் உள்ளது.
மொத்தத்தில் நாளைக்குள் ஏதாவது தெளிவாகி விடும் என்று அதிமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது.