ஜானகி எம்.ஜி.ஆர்... ஜெயலலிதா.. தமிழ்நாட்டின் 3வது பெண் முதல்வராகிறார் சசிகலா
ஜானகி ராமச்சந்திரன், ஜெயலலிதாவைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் 3வது பெண் முதல்வராக பொறுப்பேற்க உள்ளார் சசிகலா.
சென்னை: அதிமுகவைச் சேர்ந்த ஜானகி ராமச்சந்திரன் மற்றும் ஜெயலலிதாவைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் மூன்றாவது பெண் முதல்வராக சசிகலா பொறுப்பேற்க உள்ளார்.
அதிமுகவை தொடங்கிய எம்ஜிஆர் 1987ம் ஆண்டு மறைந்த போது, அவரது மனைவி வி.என். ஜானகி முதல்வராக பொறுப்பேற்றார். இவர்தான் தமிழ்நாட்டின் முதல் பெண் முதல்வர். இதனைத் தொடர்ந்து கட்சியில் ஜெயலலிதா பிரிவு ஜானகி பிரிவு ஏற்பட்டது. அப்போது நடைபெற்ற தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து ஜானகி அதிமுகவை ஜெயலலிதாவிடம் ஒப்படைத்துவிட்டு அரசியலில் இருந்து விலகினார்.
இதனைத் தொடர்ந்து அதிமுகவின் பொதுச் செயலாளராக ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்பட்டார். 1991ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலின் போது காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தார் ஜெயலலிதா. ராஜீவ் காந்தி பிரச்சாரத்திற்காக தமிழகம் வந்த போது அவர் படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலையின் அனுதாப அலைகள் முழுவதும் ஜெயலலிதாவை தமிழ் நாட்டின் இரண்டாவது பெண் முதல்வராக ஆக்கியது. 6 முறை முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5ம் தேதி மறைந்தார்.
இதனை அடுத்து அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம், அதிமுகவின் 3வது பெண் தலைவராக உயர்ந்துள்ள சசிகலா, தற்போது சட்டசபைக் குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு, 3வது முதல்வராகவும் பொறுப்பேற்க உள்ளார்.
தமிழகத்தில் இதுவரை இருந்த பெண் முதல்வர்கள் அனைவருமே அதிமுகவைச் சேர்ந்தவர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.