அன்று "அம்மா" காஸ்ட்யூமில்.... இன்று "கைதி" டிரஸ்ஸில்... சசிகலாவின் பரிணாம வளர்ச்சி!
பெரா வழக்கில் விசாரணைக்காக எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் சிறை கைதி உடையில் வீடியோ கான்பிரன்சிங் மூலம் சசிகலா தோன்றினார்.
சென்னை: பெரா வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சசிகலா சிறை கைதி உடையில் பெங்களூரில் சிறையில் இருந்தபடியே வீடியோ கான்பிரன்சிங்கில் சென்னை எழும்பூர் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜரானார்.
ஜெ.ஜெ.டிவிக்கு வெளிநாடுகளில் இருந்து கடந்த 1996-97-ஆம் ஆண்டு அப்லிங்க் வசதி செய்ய ஒளிபரப்பு சாதனங்கள் வாங்குவதற்காக பல கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டது. இதில் மத்திய அரசின் அனுமதியின்றி வெளிநாட்டு நிறுவனங்களுடன் பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக சசிகலா, பாஸ்கரன், சுதாகரன், தினகரன் ஆகியோர் மீது 5 வழக்குகளை அமலாக்கத்துறை பதிவு செய்தது.
இந்த வழக்கின் விசாரணை சென்னை எழும்பூர் அல்லிக்குளம் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பாஸ்கரன், தினகரன் ஆகியோர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. சுதாகரன் மீது நேற்று குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
சசிகலாவுக்கு தொடர்பு
சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் இருக்கும் சசிகலாவுக்கும் இந்த வழக்கில் தொடர்புள்ளதாக அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இதை அடுத்து அவரிடமும் விசாரணை நடத்த கடந்த சில மாதங்களுக்கு முன்பு நீதிபதி உத்தரவிட்டார்.
வீடியோ கான்பிரன்சிங்
அவரது உடல்நலனைக் கருத்தில் கொண்டு பெங்களூர் சிறையில் இருந்தவாறே வீடியோ கான்பிரன்சிங்கில் ஆஜராக அனுமதிக்குமாறு சசி தரப்பு வழக்கறிஞர் மனு தாக்கல் செய்தார். அதற்கு நீதிபதி அனுமதி வழங்கினார்.
சிறை கைதி உடையில்
அதன்படி சென்னை எழும்பூர் நீதிமன்ற நீதிபதி முன்பு பெங்களூரில் இருந்து கொண்டு வீடியோ கான்பிரன்சிங் மூலம் சசிகலா இன்று ஆஜரானார். அப்போது அவர் சிறை கைதி உடையிலேயே கேமரா முன் தோன்றினார். 50 நிமிடங்கள் அவரிடம் கேள்விகள் கேட்கப்பட்டன.
ஜெயலலிதாவாக மாறிய சசிகலா
ஜெயலலிதா மறைந்த உடன் சசிகலா பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் ஜெயலலிதாவின் டூப்பாக மாறி நடை, உடை, பாவனை, சிகை அலங்காரம் ஆகியவற்றை மாற்றினார் சசிகலா. ஆனால் இன்று சிறை கைதி உடையில் காட்சி அளித்துள்ளார்.