தினகரன் கைதுக்கு டெல்லி... டெல்லி... டெல்லி தான் காரணம்.. அடித்துச் சொல்கிறார் நாஞ்சில் சம்பத்
சென்னை: டி.டி.வி. தினகரன் மீதான நடவடிக்கைக்கு டெல்லி தான் காரணம் என்று அதிமுக அம்மா அணி செய்தித் தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.
இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் ஆணையத்திற்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக டிடிவி தினகரன் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்யப்பட்டார்.
நேற்று டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட அவரை ஐந்து நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து டிடிவி தினகரனை சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகிறது டெல்லி போலீஸ்.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நாஞ்சில் சம்பத், தினகரனை அரசியலில் இருந்து வெளியேற்ற சிலர் முயற்சிக்கிறார்கள். போதிய ஆதாரம் இல்லாமல் தினகரன் கைது செய்யப்பட்டிருக்கிறார். தினகரனிடம் விசாரணை என்ற பெயரில் நாடகம் நடத்துகிறார்கள். டிடிவி தினகரன் மீது பொய்வழக்கு புனையப்பட்டுள்ளது. டெல்லி போலீசார் நடத்தும் விசாரணையால் எங்களுக்கு எந்த அதிர்ச்சியும் இல்லை.
மேலும் அதிமுக தலைமை அலுவலகத்தில் சசிகலாவின் பேனர்கள் அகற்றப்பட்டது சரித்திர அநீதி எனவும் குறிப்பிட்ட நாஞ்சில் சம்பத், அதிமுகவின் இரு அணிகளையும் இணைக்க வேண்டிய அவசியம் இல்லை. இருப்பினும் இரு அணிகளையும் இணைக்கும் முயற்சி வெற்றி பெற்றால் மகிழ்ச்சியானது. ஓ. பன்னீர்செல்வம் மற்றும் பாண்டியராஜனை நீக்கிவிட்டு மற்றவர்களை இணைத்துக் கொள்ளலாம் என்றும் டிடிவி தினகரன் கைதுக்கு டெல்லி... டெல்லி... டெல்லி தான் காரணம் எனவும் அவர் கூறினார்.