அம்மா வீட்டுக்கு வந்த மாதிரி இருக்கு... சசி பேனர் அகற்றப்பட்டதற்கு தொண்டர்கள் மகிழ்ச்சி
அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்த சசிகலாவின் பேனர்கள் அகற்றப்பட்டதில் ஓபிஎஸ் அணிக்கு மகிழ்ச்சியோ இல்லையோ உண்மையான அதிமுக தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
சென்னை: அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த சசிகலாவின் பேனர்களை எடப்பாடி பழனிச்சாமி அணியினர் அகற்றியுள்ளனர். இது பல்லாயிரக்கணக்கான தொண்டர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அம்மா வீட்டுக்கு வந்தமாதிரி இப்பத்தான் நிம்மதியாக இருக்கு என்று கூறியுள்ளனர்.
ஓபிஎஸ் அணியில் உள்ள முன்னாள் அமைச்சர் மதுசூதனன்,சசிகலா புகைப்படங்களை அதிமுக தலைமைக் கழக அலுவலகத்தில் இருந்து அகற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். ஆனால் அதெல்லாம் முடியாது என்று கூறினார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.
நேற்றிரவு இரு அணிகளின் முக்கியத் தலைவர்களும் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தினார்கள். 5 மணி நேரம் நடத்திய பேச்சுவார்த்தையின் போதுதான் டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டதாக செய்திகள் பிளாஷ் அடித்தன.
அப்போதே பேனர்களை அகற்றுவதைப் பற்றி முடிவெடுத்து விட்டார்கள். இன்று காலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்த பேனர்களை அதிகாரப்பூர்வமாக அவர்களே அகற்றினார்கள்.
ஜெயலலிதா
அதிமுக தலைமை அலுவலகத்தில் பிரதானமாக இருப்பது நிறுவனர் எம்ஜிஆர் சிலை. இதற்கு அடுத்தபடியாக ஜெயலலிதாவை வாழ்த்தி நிர்வாகிகள் பேனர்கள் வைத்திருப்பார்கள். ஜெயலலிதா அலுவலகத்திற்கு வரும் போது ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலை முழுக்க பேனர்களால் அலங்கரிக்கப்படும். எல்லாமே டிசம்பர் 5ஆம் தேதியோடு நின்று போனது.
ஜெயலலிதா மரணம்
டிசம்பர் 5ஆம் தேதி ஜெயலலிதா மரணமடையவே முதல்வரானார் ஓ.பன்னீர் செல்வம். அதிமுக பொதுச் செயலாளராக டிசம்பர் இறுதியில் சசிகலா பொறுப்பேற்றுக் கொண்டார்.
சசிகலா போஸ்டர்கள்
ஜெயலலிதா மற்றும் சசிகலா இருவரும் இருப்பது போன்ற போஸ்டர்கள் பல இடங்களில் ஒட்டப்பட்டன. அதனை உண்மையான அதிமுக தொண்டர்கள் கிழித்து எறிந்தனர். அதிமுக தலைமை அலுவலகத்தில் சசிகலா இடம் பெற்றிருக்கும் பிரமாண்ட பேனர்களை பிரதான வாசலில் வைத்தனர். அதைப்பார்த்து பல தொண்டர்களுக்கு கொதிப்பு அதிகமானது.
சசிகலா ஸ்டைல்
தலைமை அலுவலகத்திற்கு சசிகலா வந்த போது அவரது நடை, உடை, பாவனைகளை மாற்றியிருந்தார். அதெல்லாம் 2 மாதங்கள் கூட நீடிக்கவில்லை. அதிமுகவும் இரு அணிகளாக பிளவு பட்டது. பிப்ரவரி 15ஆம் தேதியன்று சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா.
இணையும் அணிகள்
பிரிந்துள்ள அதிமுக இரு அணிகள் இணைவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக தலைமை அலுவலகத்திற்குத்தான் பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும். அங்கேயுள்ள சசிகலாவின் பேனர்களை அகற்ற வேண்டும் என்ற ஓபிஎஸ் கோரிக்கையை ஏற்றுக்கொண்டது எடப்பாடி பழனிச்சாமி அணி.
அதிகாரப்பூர்வ அகற்றம்
சசிகலாவின் பேனர்களை அதிகாரப்பூர்வமாக அகற்றினர் அதிமுகவினர். அப்போது அவர்களின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. டிசம்பர் 5ஆம் தேதிக்குப் பிறகு அதிமுக தலைமை அலுவலகத்திற்கு செல்வதை பல தொண்டர்கள் தவிர்த்து வந்தனர். இன்றைய தினம் சசிகலாவின் பேனர்கள் அகற்றப்படுவது பற்றி ஊடகங்களில் செய்திகள் வெளியான உடனேயே ஏராளமானோர் திரண்டனர்.
அம்மா வீடு
அந்த பொம்பள பேனரை கழற்றிட்டாங்க... இப்பத்தான் நிம்மதியா இருக்கு. அம்மாவும், தலைவரும் மட்டும் இருக்காங்க. இனி அம்மா வீட்டுக்கு வர மாதிரி வந்து போவோம் என்கின்றனர் அதிமுக தொண்டர்கள். ஒரு பேனரை அகற்றியதற்கே இத்தனை மகிழ்ச்சியடைகிறார்கள் என்றார் சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கிவிட்டதாக அறிவிப்பு வெளியானால் பட்டாசு வெடித்தே அதிமுகவினர் கொண்டாடினாலும் ஆச்சரியமில்லை.