சசிகலா பேனர்களை அகற்ற முடியாது... ஓபிஎஸ் அணியை சீண்டும் திண்டுக்கல் 'சீனி'
அதிமுக அலுவலகத்தில் உள்ள சசிகலாவின் பேனர்களை அகற்ற முடியாது என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை: அதிமுக அலுவலகத்தில் உள்ள சசிகலாவின் பேனர்களை அகற்ற முடியாது என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
அதிமுக தலைமை கழகத்தில் உள்ள சசிகலா படத்தை உடனடியாக அகற்ற வேண்டும் என எடப்பாடி அணிக்கு ஓபிஎஸ் அணி கோரிக்கை விடுத்துள்ளது. மேலும் சசிகலா படத்தை அகற்றி அதிமுக தலைமை கழகத்தின் புனிதத்தை காக்க வேண்டும் என்றும் ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த மதுசூதனன் வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் எடப்பாடி அணியைச் சேர்ந்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கட்சி அலுவலகத்தில் உள்ள சசிகலாவின் படத்தை அகற்ற முடியாது. அதிமுக இணைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்தும் இதுவரை எந்த பதிலும் தெரிவிக்காமல் வெறும் கோரிக்கைகள் குறித்து பேசி வருகின்றனர் என்றார்.
அதிமுக இணைப்புக்கு முட்டுக்கட்டை ஏற்படுத்தும் வகையில் லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர் ஜெயகுமார் ஆகியோர் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து ஓபிஎஸ் அணியினரின் கோபத்துக்கு ஆளாகினர். இதனால் பேச்சுவார்த்தை நடைபெறும் வரை யாரும் வாய் திறக்கக் கூடாது என்று முதல்வர் எடப்பாடி உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் திண்டுக்கல் சீனிவாசன் இத்தகைய கருத்தை தெரிவித்துள்ளார்.