கணவரை பிரித்த சிறை தண்டனை.. மீண்டும் சேர்த்து வைத்த பரோல்.. சசிகலா நடராஜன் 2017 பிளாஷ்பேக்
சிறை தண்டனை பெற்று சிறைக்கு சென்ற சசிகலா உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட கணவர் நடராஜனை பரோலில் வந்து சந்தித்தார்.
சென்னை: 2017 ஆம் ஆண்டு சசிகலா குடும்பத்தினருக்கு மறக்க முடியாத ஆண்டாக தான் இருந்திருக்கும் என்பதை மறுக்க முடியாது. சசிகலா சிறைக்கு சென்றதும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட கணவர் நடராஜனை காண பரோலில் வந்ததும் இந்த ஆண்டில்தான்..
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா கடந்த பிப்ரவரி மாதம் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது கணவர் நடராஜனை அவர் கட்டித் தழுவி கதறினார்.
நடராஜன் மூலம் ஜெயலலிதாவுக்கு அறிமுகமானவர் சசிகலா. ஒரு கட்டத்தில் ஜெயலலிதாவுக்காக கணவரையே ஓரம்கட்டினார் சசிகலா. 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஜெயலலிதாவுடன் இருந்த சசிகலா அவரது மறைவுக்குப் பிறகு நடராஜன் உட்பட ஜெயலலிதாவால் விரட்டப்பட்ட ஒட்டுமொத்த குடும்பத்தையும் போயஸ்கார்டனில் கோலொச்ச செய்தார்.
மீண்டும் பிரித்த தீர்ப்பு
அதுவரை இருக்கும் இடம் தெரியாமல் இருந்த நடராஜன் அடிக்கடி தொலைக்காட்சிகளில் தோன்றி அரசு குறித்து கருத்து தெரிவித்தார். இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி காதலர் தினத்தன்றுதான் அந்த அதிர்ச்சி தீர்ப்பு வந்தது.
சிறையில் அடைக்கப்பட்ட சசி
சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் தலா 100 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பிப்ரவரி 15ஆம் தேதி சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா.
உறுப்பு மாற்று அறுசைசிகிச்சை
கடந்த செப்டம்பர் மாதம் சசிகலாவின் கணவர் நடராஜன் உடல்நலக்குறைவால் சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அக்டோபர் மாதம் கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
நிபந்தனைகளுடன் பரோல்
இதைத்தொடர்ந்து கணவரை காண பரோல் கேட்டு விண்ணப்பித்தார் சசிகலா. முதல்முறை அவரது பரோல் மனு நிராகரிக்கப்பட்டது. பின்னர் மீண்டும் 15 நாட்கள் பரோல் கேட்டு விண்ணப்பித்தார் சசிகலா.அவருக்கு அக்டோபர் 6ஆம் தேதி 5 நாட்கள் பரோல் வழங்கப்பட்டது. அந்த 5 நாட்களில் சசிகலா அரசியல் நிகழ்ச்சிகளில் பங்கேற்க கூடாது, ஊடகங்களுக்கு பேட்டியளிக்க கூடாது உள்ளிட்ட 4 நிபந்தனைகளை விதித்தது சிறை நிர்வாகம்.
கிருஷ்ணப்பிரியா வீட்டில்
சிறையில் இருந்து வெளியே வந்த வந்த தியாகராய நகரில் உள்ள இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியா வீட்டில் தங்கினார். அங்கிருந்தப்படியே கணவர் நடராஜனை தினமும் மருத்துவமனையில் சென்று சந்தித்துவந்தார் சசிகலா.
மீண்டும் சிறையில் அடைப்பு
சசிகலா சிறையில் இருந்து வந்த போதும் கணவரை காண மருத்துவமனைக்கு சென்ற போதும் அவருக்கு ஆதரவாளர்கள் மலர்களை தூவியும் வானவேடிக்கைக்கு ஏற்பாடு செய்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். கணவர் நடராஜனை பார்த்துக்கொண்ட சசிகலா கடந்த அக்டோபர் 12ஆம் தேதி பரோல் நிறைவடைந்து சிறைக்கு திரும்பினார். அன்று மாலையே அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.