வெளியே வரவே முடியாது, 4 வருஷமும் உள்ளேதான் இருக்கனும் சசிகலா.. கட்ஜூ
சசிகலாவின் மறு ஆய்வு மனுவால் எந்த பலனும் கிடைக்காது என உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேயே கட்ஜு தெரிவித்துள்ளார்.
திருச்சி: சசிகலா 4 வருடங்களும் சிறையில் தான் இருக்க வேண்டும். அவரின் மறு ஆய்வு மனுவால் எந்த பலனும் கிடைக்காது என உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு தெரிவித்துள்ளார்.
திருச்சி என்ஐடியில் 'வருங்கால இந்தியாவில் இளம் தொழில்முனைவோரின் பங்கு' என்ற தலைப்பில் கருத்தரங்கு நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள வந்த உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ திருச்சி வந்தார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் சசிகலாவின் தண்டனை குறித்தும் தற்போதைய தமிழக முதல்வர் மற்றும் தமிழக அரசியல் நிலவரம் குறித்தும் கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு அவர் கூறியதாவது, தமிழக முதல்-அமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமி சசிகலாவின் விசுவாசி என்று கேள்விப்பட்டேன்.
6 மாசம் அவகாசம் கொடுப்போம்
புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசுக்கு 6 மாத காலம் அவகாசம் கொடுக்க வேண்டும். அதன்பிறகுதான் அவர்களுடைய செயல்பாடு குறித்து விமர்சிக்க வேண்டும்.
சசி மேல்முறையீடு செய்யமுடியாது
சொத்து குவிப்பு வழக்கில் தன் மீதான தீர்ப்பை எதிர்த்து சசிகலா மேல்முறையீடு செய்ய முடியாது. சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு இறுதியானது.
மறுஆய்வு மனு தாக்கல் செய்யலாம்
ஆனால் மறுஆய்வு மனு வேண்டுமானால் தாக்கல் செய்யலாம். பெரும்பாலான வழக்குகளில் மறுஆய்வு மனுக்கள் தள்ளுபடிதான் செய்யப்பட்டுள்ளன.
சசியால் வெளியே வரமுடியாது
மறுஆய்வு மனுவால் எந்த பலனும் கிடையாது. ஆகவே சசிகலா 4 ஆண்டு சிறை தண்டனையை அனுபவித்து தான் ஆக வேண்டும். வெளியே வர முடியாது.
ஓபிஎஸ்க்கு ஆதரவு இல்லாமல் போய்விட்டது
தமிழகத்தில் கவர்னரின் செயல்பாடு சரியாக உள்ளது. ஓ.பன்னீர்செல்வத்துக்கு எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இல்லை. எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருந்தால் தான் அவரால் ஆட்சி அமைக்க முடியும். இவ்வாறு உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு கூறினார்.