ஜெயலலிதா கொடுத்த பதவியிலிருந்து என்னை நீக்க சசிகலா யார்.. ஓ.பன்னீர் செல்வம் ஆவேசம்
அதிமுக பொருளாளர் பதவி எனக்கு ஜெயலலிதா கொடுத்தது. சசிகலா என்னை நீக்க முடியாது என்று ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
சென்னை: அதிமுக பொருளாளர் பதவி மறைந்த முதல்வர் ஜெயலலிதா எனக்குக் கொடுத்தது. அதிலிருந்து என்னை நீக்க யாருக்கும் அதிகாரம் இல்லை என்று முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா சமாதியில் தியானம் செய்து விட்டு பின்னர் பேட்டி கொடுத்து தமிழகத்தையே புரட்டிப் போட்டு விட்டார் ஓ.பன்னீர் செல்வம். அதைத் தொடர்ந்து அவரிடமிருந்து பொருளாளர் பதவியைப் பறித்தார் சசிகலா.
இதுகுறித்து பின்னர் தனியார் தொலைக்காட்சிக்கு ஓ.பன்னீர் செல்வம் பேட்டி தருகையில், 10 ஆண்டுகளுக்கு முன்பு என்னை அதிமுக பொருளாளராக நியமித்தார் ஜெயலலிதா. அவருக்கு மன நிறைவு தரும் வகையில் நான் பணியாற்றியுள்ளேன். அந்தப் பதவியிலிருந்து என்னை நீக்க யாருக்கும் அதிகாரம் இல்லை. என்னை நீக்க முடியாது.
நான் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினைப் பார்த்து சிரித்ததை குற்றமாக சொல்லியுள்ளனர். ஆனால் அது குற்றம் இல்லை என்று கூறினார் ஓ.பன்னீர் செல்வம்.