மீண்டும் மீண்டும் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்... பீதியை கிளப்பும் சசி
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா இன்று மீண்டும் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தை கூட்டவுள்ளார். ஒரு வார இடைவெளியில் சசிகலா கூட்டும் இரண்டாவது எம்எல்ஏக்கள் கூட்டம் இதுவாகும்.
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா ஒரே வார இடைவெளியில் இன்று இரண்டாவது முறையாக எம்எல்ஏக்கள் கூட்டத்தை கூட்டியுள்ளார். இந்தக் கூட்டத்தில் அவர் முதல்வராக தேர்வு செய்யப்படுவார் என வெளியாகும் தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக பதவியேற்ற நாள் முதல் அவரது நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. அவர் விரைவில் முதல்வராக பதவியேற்பார் என கூறப்படுவதால் அவர் ஈடுபடும் ஒவ்வொரு நடவடிக்கையும் என்ன செய்யப் போகிறாரோ என மக்கள் மத்தியில் பீதியை கிளப்பி வருகிறது.
பொதுச்செயலாளராக பதவியேற்ற சில நாட்களிலேயே மாவட்ட நிர்வாகிகளை சந்தித்த சசிகலா எம்ஜிஆரின் நூற்றாண்டு விழா குறித்து ஆலோசித்ததாக கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த 27ஆம் தேதி சசிகலா முதல்முறையாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எம்எல்ஏக்கள் கூட்டத்தை கூட்டினார்.
எனக்கு கீழ்தான் முதல்வர்
அப்போது எனக்கு கீழ்தான் முதல்வர் என்பதை கூறுவதுப்போல் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை முதல்வர் என்றும் பாராமல் எம்எல்ஏக்களோடு கூட்டத்தோடு கூட்டமாக அமர வைத்தார். இதனால் அதிருப்தியடைந்த ஓ.பி.எஸ் ஆதரவு எம்எல்ஏக்கள் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவே உயிரோடு இருக்கும் போது ஓ.பன்னீர்செல்வத்தை தமக்கு சமமாகதான் உட்கார வைத்தார் என்று கூறி ஆதங்கப்பட்டனர்.
மீண்டும் எம்எல்ஏக்கள் கூட்டம்
இந்நிலையில் 2வது முறையாக கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று பிற்பகல் மீண்டும் அதிமுக எம்எல்ஏக்களின் கூட்டம் நடைபெறுகிறது. ஒரு வார இடைவெளியில் மீண்டும் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தை கூட்டியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேதி குறித்து ஜோசியர்
ஏற்கனவே முதல்வராக பதவியேற்க சசிகலா ஆர்வம் காட்டி வருவதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. அவர் முதல்வராக பதவியேற்க "சூட்கேஸ்" ஜோசியர் தேதி குறித்து கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
நாளை பதவியேற்பா?
இந்நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சசிகலா முதல்வராது குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இன்றைய கூட்டத்தில் முதல்வராக சசிகலா தேர்வு செய்யப்பட்டால் நாளை அவர் பதவியேற்பார் என்றும் வெளியாகியுள்ளது
மூத்த தலைவர்கள் மறுப்பு
எனினும் இவ்வாறு வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை என அக்கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர் தெரிவித்துள்ளனர். மேலும் இன்று நடைபெற இருக்கும் கூட்டத்தில் அரசாங்கம் மற்றும் எம்எல்ஏக்களுடன் நேரடி தகவல் பரிமாற்றம் இருக்க வேண்டும் என்றே நடைபெற இருக்கிறது என தெரிவித்துள்ளனர்.