சசிகலா போட்டியிடப் போவது எங்கே.. ஆர்.கே.நகரா? தென்மாவட்டமா? காவிரி டெல்டாவா?
அதிமுக பொதுச்செயலராகிவிட்ட சசிகலா அடுத்து முதல்வர் பதவியை குறித்து வைத்துள்ளார். அவர் எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்பது குறித்த விவாதம் களை கட்டியுள்ளது.
சென்னை: அதிமுகவின் பொதுச்செயலராகிவிட்ட சசிகலா முதல்வர் பதவியை நோக்கி நகருகிறார்.. முதல்வராக சசிகலா பதவியேற்றால் 6 மாதங்களுக்குள் எம்.எல்.ஏ. ஆக வேண்டும். ஆகையால் சசிகலா எந்த தொகுதியில் போட்டியிடுவார்? என்ற விவாதம் களைகட்டியுள்ளது.
சசிகலாவை எந்த எதிர்ப்பும் இன்றி அதிமுக நிர்வாகிகள் பொதுச்செயலராக தேர்ந்தெடுத்துவிட்டனர். இதனால் முதல்வர் பதவியை அவர் பெறுவதில் சிக்கல் எதுவும் இல்லை.
ஜனவரி 12-ல் பதவியேற்பு?
சசிகலாவின் கணவர் நடராஜன் முதல்வர் என்றும் இல்லை இல்லை ஜனவரி 12-ந் தேதி சசிகலாதான் முதல்வராக பதவியேற்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் சசிகலா முதல்வரானால் 6 மாதங்களில் எம்.எல்.ஏ.வாக வேண்டும்.
ஆர்கே நகரில்?
தற்போது அவர் போட்டியிடும் தொகுதி எது? என்ற விவாதம் அதிமுகவில் களைகட்டியுள்ளது. ஜெயலலிதா மறைவால் காலியாக உள்ள ஆர்கே நகர் தொகுதியில் சசிகலா போட்டியிடலாம் எனக் கூறப்படுகிறது.
கடும் எதிர்ப்பு
அப்படி அவர் போட்டியிட்டால் இன்னமும் அவரை ஏற்க மறுக்கும் அதிமுக தொண்டர்கள் நிச்சயம் தோற்கடிக்க அனைத்து உள்ளடி வேலைகளையும் பார்க்கலாம் என்கின்றன உளவுத்துறை தகவல்கள். அந்த அளவுக்கு சசிகலா மீது கடும் அதிருப்தியில் உள்ளனராம் வடசென்னை அதிமுகவினர்.
தென்மாவட்டமா?
ஆகையால் பாதுகாப்பாக ஆண்டிபட்டி, உசிலம்பட்டி, மதுரை மேற்கு என தமக்கு ஆதரவாக இருக்கும் பிரமலை கள்ளர் மெஜாரிட்டியாக உள்ள தொகுதியில் சசிகலா போட்டியிடக் கூடும் எனவும் கூறப்படுகிறது. இருப்பினும் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் இங்கும் சசிகலாவை தோற்கடிக்க முழு வீச்சில் இறங்கலாம் என்கிற அச்சமும் மன்னார்குடி தரப்பில் இருக்கிறது.
யார் ராஜினாமா?
ஆர்கே நகர் இல்லாமல் வேறு தொகுதியில் போட்டியிட்டால் சசிகலாவுக்காக ராஜினாமா செய்யப் போவது யார்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. சசிகலா பரிந்துரையில் தேர்தலில் சீட் வாங்கி அமைச்சர்களான 2 பேரில் ஒருவர் ராஜினாமா செய்யக் கூடும் எனவும் கூறப்படுகிறது.