அப்பல்லோவில் ஜெ. தலைமையில் காவிரி கூட்டம் நடந்தது... பிரமாணப்பத்திரத்தில் சசி தகவல்!
Recommended Video
சென்னை : அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு செப்டம்பர் 27ம் தேதி, 2016ம் ஆண்டில் ஜெயலலிதா தலைமையில் காவிரி நீர் பங்கீடு தொடர்பான கூட்டம் நடந்ததாக சசிகலா பிரமாணப்பத்திரத்தில் கூறியுள்ளார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செப்டம்பர் 22, 2016 முதல் என்ன நடந்தது என்பதை சசிகலாவை தவிர வேறு யாராலும் உறுதியாகச் சொல்லிவிட முடியாது. ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்ம முடிச்சுகளை அவிழ்க்க சசிகலாஅளிக்கும் வாக்குமூலம் முக்கியமானதாக பார்க்கப்பட்டது.
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி கமிஷனில் சசிகலா தரப்பில் 55 பக்கங்கள் கொண்ட பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மார்ச் 12ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட இந்த பிரமாணப் பத்திரங்களின் விவரங்கள் தற்போது தெரிய வந்துள்ளன. மொத்தம் 99 பாராக்களில் ஜெயலலிதாவை வேதா நிலையத்தில் இருந்து மருத்துவமனை அழைத்து சென்றது மற்றும் அவரது இறப்பு வரையிலான அனைத்து நிகழ்வுகளும் குறிப்பிடப்பட்டுள்ளன.
மயங்கிய ஜெயலலிதா
வேதா நிலையத்தில் உள்ள வீட்டின் முதல் தளத்தில் குளியல் அறையில் ஜெயலலிதா பல் தேய்த்துக் கொண்டிருந்த போது அவருக்கு உடல்நிலை மோசமானது. இதனையடுத்து என்னை உதவிக்கு அழைத்தார், உடனே நான் சென்று அவரை படுக்கை அறைக்கு அழைத்து வந்தேன், படுக்கையில் படுத்த பின்னர் ஜெயலலிதா மயங்கிவிட்டார் என்று சசிகலா பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.
ஒரு வாரம் உடல்நிலை மோசம்
டாக்டர் சிவகுமாருக்கு தகவல் கூறியதையடுத்து அவர் அப்பல்லோ மருத்துவமனையை தொடர்பு கொண்ட நிலையில் 10 நிமிடத்தில் ஆம்புலன்ஸ் வந்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் செப்டம்பர் முதல் வாரத்தில் ஜெயலலிதாவின் உடல்நிலை மோசமாகத் தான் இருந்தது, சர்க்கரை அளவு நிலையாக இல்லாமல் இருந்ததே இதற்கு காரணம்.
மருத்துவர்கள் அறிவுரை
தொடர்ந்து மருத்துவர்கள் குறைந்த சக்தியுள்ள ஸ்டீராய்டு மாத்திரைகளை அளித்தனர். செப்டம்பர் 19ம் தேதி முதலே ஜெயலலிதாவிற்கு காய்ச்சல் இருந்தது கடைசியாக செப்டம்பர் 21ல் பொது நிகழ்ச்சியில் ஜெயலலிதா பங்கேற்றார் என்றும் சசிகலா தெரிவித்துள்ளார்.
அப்பல்லோவில் நடந்த கூட்டம்
செப்டம்பர் 27,2016ம் ஆண்டு ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் காவிரி நீர் பங்கீட்டுக் குழுவில் பங்கேற்க டெல்லி செல்லும் அதிகாரிகளுடன் நேரடியாக ஆலோசனை நடத்தியதாக சசிகலா கூறியுள்ளார். மேலும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகளின் பெயர்களையும் பட்டியலிட்டுள்ளார்.
ஆலோசனையில் பங்கேற்ற அதிகாரிகள்
அப்போதைய தலைமை செயலாளர் ராம மோகனராவ், அட்வகேட் ஜெனரல் முத்துக்குமாரசாமி, அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் மற்றும் முதல்வரின் செயலாளர்கள் ராமலிங்கம், வெங்கட்ராமன் உள்ளிட்டோர் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றதாக சசிகலா பிரமாணப்பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார். ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு இந்த கூட்டம் நடைபெற்றதாக அப்போதே செய்திகள் வெளியாகின.
சந்தேகம் ஏன்?
வழக்கமாக முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றால் அந்த புகைப்படங்கள் அரசு செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை சார்பில் வெளியிடப்படும். ஆனால் ஜெயலலிதா நேரடியாக பங்கேற்றுக் கொண்ட கூட்டம் என்று சொல்லப்பட்டாலும் ஆலோசனைக் கூட்டம் தொடர்பான புகைப்படங்களோ, வீடியோவோ வெளியிடாததால் இதில் சந்தேகம் இருந்து வந்தது.