சசிகலா, தினகரன் இல்லாமல் அதிமுக செயல்படாது.. நாஞ்சில் சம்பத் ஆவேச பேச்சு
சசிகலா, தினகரன் இல்லாமல் அதிமுக செயல்படாது என்று நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.
சிவகங்கை: நிலத்தை நிராகரித்து விட்டு தண்ணீர் செல்லாததைப் போல சசிகலா, தினகரன் இல்லாமல் அதிமுக செயல்படாது என்று நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் டி.டி.வி. தினகரன் கைதை கண்டித்து நடந்த பொதுக் கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், ஓ.பி.எஸ்.சுக்கு மருத்துவத்தை பற்றி என்ன விவரம் தெரியும்? அவருக்கு ஜெயலலிதா மறைவின் மர்மத்தை பற்றி கேட்க என்ன அருகதை உள்ளது?
ஜெயலலிதா 75 நாட்கள் மருத்துவமனையில் இருந்த போது, 74 தலைவர்கள் வந்து பார்த்தார்கள். அவ்வாறு இருக்கும் போது ஜெயலலிதா மரணம் எப்படி மர்மமாக இருக்கும்? சசிகலா மற்றும் தினகரன் மீது புகார் சொல்லும் பன்னீர் செல்வத்திற்கு தண்டனை கொடுக்க பொது மக்களிடமும், இளைஞர்களிடமும் நீதி கேட்க வந்துள்ளேன்.
அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் எப்போது எந்த கட்சியில் இருப்பார் என்று யாருக்கும் தெரியாது. ஒவ்வொரு பக்கமும் காற்று அடிக்கும் போது அவர் ஒவ்வொரு கட்சிக்கும் சென்று விடுவார். இவர் அ.தி.மு.க.வை விமர்சிக்க என்ன அருகதை உள்ளது?
அ.தி.மு.க.வை காப்பாற்ற வந்தவர் தான் தினகரன். இவர்தான் நிதி அமைச்சர் என்று சொன்ன அமைச்சர்கள், இன்று ஏன் மவுனமாக இருக்கிறார்கள்? ஓ.பி.எஸ். தமிழகத்தில் அனாதையாக திரியும் காலம் வெகு விரைவில் வர உள்ளது. தினகரன் மவுனமாக இருப்பது, தமிழகத்தில் பெரிய மாற்றத்தை உருவாக்கும்.
திஹாரில் இருந்து தினகரன் விடுதலையாகி வரும்போது ஒரு கோடி தமிழர்கள் அவரை வரவேற்பார்கள். நிலத்தை நிராகரித்து விட்டு தண்ணீர் செல்லாததைப் போல சசிகலா- தினகரன் இல்லாமல் கட்சி செயல்படாது. இவ்வாறு அவர் பேசினார்.