ஜெயில் சாப்பாட்டை வாயில் வைக்க முடியலை.. தினகரனிடம் புலம்பிய சசிகலா
பெங்களூரு சிறையில் கொடுக்கப்படும் உணவை தம்மால் சாப்பிட முடியவில்லை என தினகரனிடம் குமுறியிருக்கிறார் சசிகலா.
சென்னை: பெங்களூரு சிறையில் கொடுக்கப்படும் உணவை தம்மால் வாயில் கூட வைக்க முடியவில்லை என தினகரனிடம் குமுறியிருக்கிறார் சசிகலா.
கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜியாக இருந்த ரூபாவின் அதிரடியைத் தொடர்ந்து, சிறைக்குள் நொந்து போய் இருக்கிறார் சசிகலா. 24 மணிநேரமும் கண்காணிக்கிறார்கள். திரும்பிப் படுக்கக்கூட முடியவில்லை. சிறை சாப்பாட்டை வாயில் வைக்க முடியவில்லை என வேதனைப்பட்டிருக்கிறார் சசிகலா.
கட்சியின் அதிகாரப்பூர்வ பொதுச் செயலாளரான சசிகலா சிறையில் இருப்பதால், கட்சியில் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் உரிமை தினகரனுக்கு உண்டு. இப்போதும் அவர்தான் கட்சியை வழிநடத்துகிறார். கட்சிக் கட்டுப்பாட்டை மீறும் எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள் மீது அவரால் நடவடிக்கை எடுக்க முடியும் என்கிறது சசிகலா தரப்பு.
அத்துடன் இந்த நடவடிக்கையை எடுப்பது குறித்துதான் சசிகலாவை சிறையில் சந்தித்துப் பேசினாராம் தினகரன். அரை மணி நேரம் நடந்த இந்த சந்திப்பில், பல்வேறு விஷயஙகளை தினகரன் விவரித்திருக்கிறார்.
ஆனால், சசிகலாவோ இதையெல்லாம் கேட்கும் நிலையிலேயே இல்லாமல் பரிதாபமாக இருந்திருக்கிறார். "நம் குடும்பத்துக்கு மட்டும்தான் இவ்வளவு சிக்கல்களைக் கொடுக்கிறார்கள். சிறை நடவடிக்கை என்ற பெயரில் நிம்மதியாக தூங்க விடுவதில்லை. அடிக்கடி சோதனை செய்கிறார்கள். இளவரசியுடன்கூட மனம் திறந்து பேச முடியவில்லை.
அனைத்தையும் கண்காணிக்கிறார்கள். நல்ல சாப்பாடு சாப்பிட்டு ரொம்பநாட்களாகிவிட்டது என நொந்து போய் புலம்பியுள்ளார். மேலும் எந்த ஒரு விஷயத்தையும் பலமுறை யோசித்து செய் என தினகரனுக்கு அட்வைஸ் செய்து அனுப்பி வைத்தாராம் சசிகலா.