ஆட்சி கவிழ்ப்புக்கு படுதீவிரமாக முயற்சிக்கும் சசிகலா தரப்பு
எடப்பாடி அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டுவர சசிகலா தரப்பு தீவிரம் காட்டுகிறதாம்.
சென்னை: சசிகலா தரப்பு மீதான நடவடிக்கையை தீவிரப்படுத்துவதில் எடப்பாடி மும்முரமாக இருக்கிறார். அதேநேரத்தில் எடப்பாடி ஆட்சியை கவிழ்த்தே ஆக வேண்டும் என்பதற்காக எந்த எல்லைக்கும் செல்வோம் என கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறது சசிகலா தரப்பு.
தமிழக அரசியலில் அடுத்த ஆடுபுலி ஆட்டம், கூவத்தூர் கூத்துகள் தொடங்குவதற்கான சமிக்ஞைகள் வெளிப்படுகின்றன. வலிமையான நேர்மையான ஐபிஎஸ் ஸ்குவாடை உருவாக்கி சசிகலா தரப்பு மீது வழக்குகள் போடுவதற்கு தயாராகி வருகிறது எடப்பாடி அண்ட் கோ.
நம்பிக்கை இல்லா தீர்மானம்
இதற்கு செக் வைக்கும் வகையில் நம்பிக்கை இல்லாத தீர்மானத்தை தங்களது ஆதரவு எம்.எல்.ஏக்கள் மூலம் கொண்டுவருவதில் மும்முரமாக இருக்கிறது சசிகலா தரப்பு. இத்தீர்மானத்துக்கு ஆதரவு திரட்டும் லாபிகளில்தான் இப்போது சசிகலா தரப்பு படு தீவிரமாக இருக்கிறதாம்.
எதிர்க்கட்சிகள்
குறிப்பாக எதிர்க்கட்சிகளின் ஆதரவை பெறுவதற்கான லாபிகள் என்ன என்பதில் ரொம்பவே தீவிரம் காட்டுகிறார்களாம். தங்களுக்கு போக்கு காட்டும் அரசாக இது விஸ்வரூமபெடுக்க விடக் கூடாது என்பதற்காகத்தான் இத்தனை வேகம் காட்டுகிறதாம் சசி தரப்பு.
உளவுத்துறை
இதை அறிந்துதான் எடப்பாடி அண்ட் கோவும் எம்.எல்.ஏக்கள் சம்பள உயர்வு உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறாராம். அத்துடன் சசிகலா தரப்பில் அனைவரையும் மிக உன்னிப்பாக கவனித்து தகவல் தர உத்தரவிடப்பட்டுள்ளதாம்.
அவர்தான் சிக்கலாம்
கோட்டையிலும் கடந்த சில நாட்களாகவே உளவுத்துறையின் முக்கிய அதிகாரியிடம் தீவிரமாக ஆலோசித்துக் கொண்டிருக்கிறார் எடப்பாடி. இதுவரை தம்முடன் கை கோர்த்து வந்த சசிகலா தரப்பைச் சேர்ந்தவருக்கு தொடர்ந்து முக்கியத்துவம் தராததால் அவர்தான் ஆட்சி கவிழ்ப்பு அஸ்திரத்தை கையிலெடுத்திருக்கிறாராம். அவரது செயல்பாடுகள் குறித்தே அந்த உளவுத்துறை அதிகாரியுடன் ஆலோசனை நடத்தி வருகிறாராம் எடப்பாடி.