டாக்டர் நமது எம்ஜிஆர் பத்திரிகையை ஜெ.வுடன் சேர்ந்து தொடங்கியது சசிகலாவாம்... தினகரனின் 'புருடா'
சென்னை: அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான டாக்டர் நமது எம்ஜிஆர் பத்திரிகையை ஜெயலலிதாவுடன் இணைந்து சசிகலாவும்தான் தொடங்கி வைத்ததாக உரிமை கொண்டாடுகிறார் டிடிவி தினகரன்.
டாக்டர் நமது எம்ஜிஆர் நாளேடு நேற்று 30வது ஆண்டில் அடி எடுத்து வைத்தது. இதையொட்டி அதிமுகவின் பொதுச்செயலர் சசிகலா சார்பில் துணைப் பொதுச்செயலர் டிடிவி தினகரன், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சசியும் தொடங்கிய
தினகரன் அனுப்பி வைத்துள்ள வாழ்த்துச் செய்தியில், "புரட்சித்தலைவி அம்மா அவர்களும், கழகப் பொதுச்செயலாளர் மதிப்பிற்குரிய சின்னம்மா அவர்களும் டாக்டர் நமது எம்.ஜி.ஆர்., நாளிதழை தொடங்கவும்; தொடர்ந்து வெற்றிப் பாதையில் நடத்திடவும் மேற்கொண்ட அரும் முயற்சிகளை, அவர்களோடு இருந்து பார்த்த எனக்கு இந்த நாளேட்டின் இன்றியமையாமை நன்கு தெளிவாகிறது" என குறிப்பிட்டுள்ளார்.
அதிகாரப்பூர்வமாக...
நமது எம்ஜிஆர் நாளேட்டை ஜெயலலிதா மட்டுமல்ல சசிகலாவும் தொடங்கி வைத்தார்; நானும் கூடவே இருந்தேன் என அதிகாரப்பூர்வமாக பதிவு செய்திருக்கிறார் தினகரன். இதே டாக்டர் நமது எம்ஜிஆர் நாளேட்டின் 2-வது பக்கத்தில் ஒரு வாழ்த்துச் செய்தி இடம்பெற்றுள்ளது.
என்னால் தொடங்கப்பட்ட...
அது இந்த பத்திரிகையின் நிறுவனரான மறைந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு அதாவது 29-வது ஆண்டில் அடி எடுத்து வைத்தப்போது அனுப்பி வைத்த வாழ்த்துச் செய்தி. அதில் "1988-ம் ஆண்டு என்னால் தொடங்கப்பட்ட" என்றே பதிவு செய்திருக்கிறார் ஜெயலலிதா.
ஜெ. தொடங்கி வைத்த
மேலும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியிலும் "1988-ஆம் ஆண்டு மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களால் தொடங்கப்பட்ட' என்றே பதிவு செய்திருக்கிறார். எந்த ஒரு இடத்திலும் அதிமுக பொதுச்செயலர் சசிகலாவின் பெயரையும் எடப்பாடி குறிப்பிடவில்லை. அதிமுகவை கைப்பற்றி தங்களுடைய சொத்தாக மாற்ற முயற்சிக்கும் சசிகலா குடும்பம் சந்தடி சாக்கில் வரலாற்றை எப்படியெல்லாம் திரிக்கிறார்கள்; திணிக்கிறார்கள் என்பதைத்தான் தினகரனின் வாழ்த்துச் செய்தி அம்பலப்படுத்துகிறது.