சசிகலா குடும்ப அரசியலில் அடுத்த வாரிசு விவேக்.... புளகாங்கிதத்தில் அடிப்பொடிகள்!
சசிகலா குடும்ப அரசியலில் அடுத்த வாரிசாக விவேக் விஸ்வரூபமெடுக்கிறார் என்கின்றனர் அவரது அடிப்பொடிகள்.
Recommended Video
சென்னை: சசிகலா குடும்ப அரசியலில் சசிகலா, தினகரனுக்கு அடுத்தது விவேக்தான் என புளகாங்கிதப்படுகின்றனர் அவரது அடிப்பொடிகள்.
ஜெயலலிதா உயிருடன் இருந்த போதே சசிகலா குடும்பம் அதிமுகவில் கோலோச்சியது. தினகரன் தொடங்கி தடியெடுத்தவர்கள் எல்லாம் தண்டல்காரர்களாகினர்.
இவர்களை அவ்வப்போது ஜெயலலிதா களை எடுத்தாலும் அதிமுகவை கரையான் புற்றுபோல கபளீகரம் செய்துவிட்டது சசிகலா குடும்பம். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் சசிகலா டூப்ளிகேட் ஜெயலலிதாவாகி கோட்டைக்கு போக முயற்சித்தார். ஆனால் அது நடக்கவில்லை.
கைவிட்டு போன கட்சி
அதற்குப் பின்னர் ஆர்கே நகர் மூலமாக தினகரனும் முதல்வர் கனவில் மிதந்தார். அவருக்கு திஹார் சிறைவாசம்தான் கிடைத்தது. இதன் பின்னர் அதிமுகவும் ஆட்சியும் சசிகலா குடும்பத்துக்கே எட்டாக்கனியாகிப் போனது.
சொத்து பாதுகாக்க...
இப்போது அதிமுக(அம்மா) என்கிற கட்சியை நடத்தி வருகிறார் தினகரன். சசிகலா குடும்பத்தைப் பொறுத்தவரை குவித்து வைத்துள்ள சொத்துகளைப் பாதுகாக்க ஒரு கட்சி அவசியம். அவ்வளவுதான். முடிந்தவரை அதிமுகவை கைப்பற்றுவது அல்லது அதிமுக(அம்மா) என்கிற தனிக்கட்சியை நடத்துவதுதான் அவர்களது பாலிசி.
ஏமாற்றம்தான்
தினகரனைத் தொடர்ந்து அதிமுக(அம்மா) கட்சியில் தம்மை முன்னிறுத்த திவாகரன் மகன் ஜெயானந்த் படுதீவிரமாக முயற்சித்துக் கொண்டிருக்கிறார். இதற்காக தினகரனின் பொதுக்கூட்ட மேடைகளில் எல்லாம் ஏறிப் பார்த்தார். டிவிகளில் பேட்டி கொடுத்துப் பார்த்தார். ஜெயலலிதாவின் சிகிச்சை பெற்ற சிடி இருக்கிறது என கொளுத்திப் போட்டுப் பார்த்தார். ஆனால் அவருக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது.
இந்நிலையில் வருமான வரித்துறை சோதனைக்குள்ளானது சசிகலா குடும்பம். இந்த சோதனையே விவேக்கை மையமாக வைத்துதான் நடந்தது என்பதாக அமைந்துவிட்டது. இதன் உச்சமாக விவேக் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அந்த செய்தியாளர் சந்திப்பை முன்வைத்து இப்போது விவேக்கின் அடிப்பொடிகள் ஆனந்த கூத்தாடுகின்றனர்.
ஜெ. பாணியாம்
செய்தியாளர்களை சந்தித்த விவேக், தாம் சொல்ல வந்ததை மட்டும் சொல்லிவிட்டுப் போனார். செய்தியாளர்களின் எந்த கேள்விக்கும் பதில் சொல்லவில்லை. இது அப்படியே ஜெயலலிதாவின் பாணி; ஜெயலலிதாவால் நேரடியாக வளர்க்கப்பட்டவர் விவேக். அதனால் ஜெயலலிதாவின் அத்தனை குணாம்சங்களும் அவருக்கு இருக்கிறது என்பதை நிரூபித்திருக்கிறது பிரஸ் மீட் என ஏகத்துக்கும் ஆனந்தப்படுகின்றனர். அத்துடன் போகிற போக்கில் இனி மன்னார்குடி அரசியலில் விவேக்தான் எல்லாமும் எனவும் பற்ற வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஃபேஸ்புக்கில் ஜெயானந்த்
விவேக் கோஷ்டியின் இந்த ஆனந்த கொண்டாட்டத்தைப் பொறுக்க முடியாமல்தான் தமது ஆதரவாளர்களுக்காக ஃபேஸ்புக்கில் ஜெயானந்த் ஒரு பதிவைப் போட்டிருந்தார். அதில், அரசியலுக்கு இத்தகைய சோதனைகள் அவசியம் என குறிப்பிட்டிருந்தார். உடனே ஜெயானந்தின் அடிப்பொடிகள் ஃபேஸ்புக்கில் கூடி கும்மியடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.