ஆர்.கே. நகரில் தினகரன் போட்டியிட சசிகலா குடும்பத்தினர் கூண்டோடு எதிர்ப்பாமே!!
ஆர்.கே.நகரில் தினகரன் போட்டியிட ஒட்டுமொத்த சசிகலா குடும்பமே கூண்டோடு எதிர்க்கிறதாம்.
Recommended Video
சென்னை: ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் தினகரன் போட்டியிட சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் மிகக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனராம். தினகரன் போட்டியிடப் போய் நெருக்கடி மேலும் அதிகரிக்குமோ என்பதுதான் சசிகலா குடும்பத்தின் அச்சம் என கூறப்படுகிறது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் போட்டியிடுவதை மன்னார்குடி சொந்தங்கள் யாருக்கும் விருப்பமில்லை. ஜெயலலிதா பாணியில் குடும்பத்தைக் களையெடுக்க எடப்பாடி திட்டம் வகுத்திருக்கிறார். அதற்குள் நாம் சென்று மாட்டிக் கொள்ள வேண்டாம். தொழிலைக் கவனித்தால் போதும் என குடும்பத்துக்கு மூத்தவர்களிடம் பேசி வருகின்றனராம்.
மத்திய அரசின் வருமான வரித்துறை சோதனைக்குப் பிறகு, சசிகலா குடும்பத்துக்கு விழுந்த பேரிடியாக இரட்டை இலை சின்னம் பறிபோனது. கட்சியின் அதிக எம்.பி, எம்.எல்.ஏக்களைக் கைவசம் வைத்திருந்ததால், எடப்பாடி பழனிசாமிக்கு இரட்டை இலை வந்து சேர்ந்தது என்ற கருத்தை தினகரன் தரப்பினர் ஏற்கவில்லை. துரோகத்தை சட்டரீதியாகவே முறியடிப்பேன் எனக் கொதித்துக் கொண்டிருக்கிறார்.
ஸ்டாலினை போல
இதையடுத்து ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணிகளில் வேகம் காட்டிக் கொண்டிருக்கிறார் தினகரன். தமிழகத்தில் ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக தனிப்பெரும் தலைவராக உருவெடுக்கும் பணிகளில் ஆர்வம் காட்டிக் கொண்டிருக்கிறார் தினகரன். ஆர்.கே.நகர் தேர்தலை எதிர்கொண்டு 25,000 வாக்குகளை வாங்கினால், மக்கள் நம்மை ஏற்றுக் கொள்வார்கள் என ஆதரவாளர்களிடம் பேசிக் கொண்டிருக்கிறார். இதனை நடராஜன் தரப்பினர் விரும்பவில்லை.
சசிகலா மன்னிப்பு கடிதம்
ஆர்.கே.நகர் தேர்தலை புறக்கணித்தால், குடும்பத்தினருக்கு சேதாரம் இருக்காது என நம்புகிறார்களாம். 2011ம் ஆண்டு போயஸ் கார்டனை விட்டு சசிகலா உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர். நடராஜன், திவாகரன், ராவணன் என ஒவ்வொருவராக வேட்டையாடப்பட்டனர். இருப்பினும், ஒருநாள் இரட்டை இலை நம்மை வந்து சேரும் என்ற எண்ணத்தில், மன்னிப்புக் கடிதம் கொடுத்தார் சசிகலா. இந்த யோசனையைக் கொடுத்தது நடராஜன்தான். நாம் யாரிடமும் மண்டியிடாத பரம்பரையைச் சேர்ந்தவர்கள்தான். ஆனால், அரசியலில் வெற்றி பெற இந்த முன்னுதாரணம் உதவாது. எம்.ஜி.ஆரைப் பகைத்துக் கொண்டு சென்ற எஸ்.டி.சோமசுந்தரம் கதி என்னவானது? ஜெயலலிதாவைப் பகைத்துக் கொண்டு நம்மால் வாழ முடியாது.
கருவறுக்க போகிறார்கள்
30 ஆண்டுகளாக நாம் பொறுமையாகக் காத்திருந்ததற்கு அறுவடை நடத்த வேண்டும் என்றால், மன்னிப்புக் கடிதம் கொடுத்துத்தான் ஆக வேண்டும் என உறுதியாக நின்றார். அதன்படியே மீண்டும் கார்டனுக்குள் நுழைந்தார் சசிகலா. ஆனால், தற்போதுள்ள ஆட்சியாளர்களிடம் எதையும் எதிர்பார்க்க முடியாது. நம்மால் பதவிக்கு வந்தாலும், நம்மைக் கருவறுப்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.
கைதுகள் தீவிரமாகும்
ஆர்.கே.நகர் தேர்தலில் தினகரனுக்கு ஓரளவு வாக்குகள் வந்து சேரும் என உளவுத்துறை அறிக்கை கொடுத்துவிட்டால், குடும்பத்து ஆட்களைக் கைது செய்யும் முடிவுக்கு எடப்பாடி தரப்பினர் செல்வார்கள். தினகரன், திவாகரன், விவேக் உள்ளிட்டவர்கள் சிறை சென்றுவிட்டால் சொத்துக்களில் அதிகாரம் செலுத்த ஆட்கள் இருக்க மாட்டார்கள். மிக எளிதாக கட்சி சொத்தாக மாற்றிவிடுவார்கள். எனவே, தேர்தலில் போட்டியிடாமல் இருப்பதுதான் சரியான நடவடிக்கை என எடுத்துக் கூறியுள்ளனர்.
தடையை மீறும் தினகரன்?
இதை சசிகலாவின் கவனத்துக்குக் கொண்டு சென்றபோது, நடராஜன் சொல்வதைக் கேட்டு நடக்கச் சொல்லுங்கள். இதற்கு முன்பு போட்டியிட வேண்டாம் என்று சொல்லியும் தினகரன் கேட்கவில்லை. என் படத்தையே புறக்கணித்துவிட்டு தேர்தல் பிரசாரம் செய்தார். இந்தமுறைக் களம் இறங்குவது அவ்வளவு நல்லதல்ல. இதனால் எந்த நல்லதும் நடக்கப் போவதில்லை எனப் பேசியிருக்கிறார். டிசம்பர் 1-ந் தேதி பிற்பகல் தினகரன் வேட்புமனுத் தாக்கல் செய்தால், அது சசிகலாவின் உத்தரவுக்கு மாறானதாகும் என கூறுகின்றனர்.