பெங்களூருக்கு நேரில் விசாரிக்க வருவோம் - சசி மனுவை தள்ளுபடி செய்த ஆணையம்
நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய அவகாசம் கோரி சசிகலா தரப்பில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
சென்னை: நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய அவகாசம் கோரி சசிகலா தரப்பில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய 7 நாட்கள் அவகாசம் கோரி சசிகலா தரப்பில் மனு அளிக்கப்பட்டது. சசிகலா தரப்பில் தாக்கல் செய்த மனுவை நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டதோடு நேரில் வந்து விசாரணை நடத்த வேண்டியிருக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.
கடந்த 2016ஆம் ஆண்டு மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.
சென்னை எழிலகத்தில் நடைபெறும் இந்த விசாரணை ஆணையத்திடம் இருந்து ஜெயலலிதாவின் மருத்துவர்கள், அரசியல் ஆலோசகர்கள், உடன் இருந்தவர்கள் என அனைவருக்கும் சம்மன் அனுப்பட்டது. சம்மன் அனுப்பிய அனைவரும் நேரில் ஆஜராகி ஜெயலலிதா மரணம் தொடர்பான தங்கள் தரப்பு வாக்குமூலத்தை அளித்தனர்.
சம்மன் அனுப்பிய நீதிபதி
இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் 21 ஆம் தேதி, விசாரணை ஆணையம் சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு சம்மன் ஒன்றை அனுப்பியது. அதில் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையில் சிலர் சசிகலாவிற்கு எதிராக சாட்சியம் வழங்கிருப்பதினால் அவர் ஆணையத்தில் நேராகவோ வக்கீல் மூலமாகவோ ஆஜராகி உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் இல்லையெனில் பிரமாண பத்திரம் மூலமாகவோ வாக்குமூலத்தை அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
சசிகலாவிற்கு கெடு
இதனையடுத்து சசிகலா தரப்பு வழக்கறிஞர், பதில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், சசிகலாவுக்கு எதிராக வாக்குமூலம் அளித்த அனைவரிடம் குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்க அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இதன் மனு மீதான விசாரணையில் தீர்ப்பளித்த நீதிபதி ஆறுமுகசாமி
23 பேர்களிடம் சசிகலா தரப்பு குறுக்கு விசாரணை செய்துக் கொள்ளலாம். குறுக்கு விசாரணை செய்ய 15 நாட்கள் கால அவகாசமும் வழங்கப்படுகிறது. அத்துடன், இந்த உத்தரவு வெளியான, 7 நாட்களுக்குள் சசிகலா தனது வாக்குமூலத்தை பிரமாண பத்திரமாக தாக்கல் வேண்டும் என ஜனவரி 30 ஆம் தேதியன்று உத்தரவிட்டார்.
பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய கெடு
ஆனாலும் சசிகலா தனது தரப்பு வாக்குமூலத்தை தாக்கல் செய்யவில்லை. விசாரணை முடிக்கப்பட்ட 22 பேரின் வாக்குமூலங்களை விசாரணை ஆணையம் சசிகலாவுக்கு தபால் மூலம் பெங்களூர் சிறைக்கு அனுப்பி வைத்தது. சசிகலா தரப்பு வழங்கறிஞர்களுக்கும் நகல் வழங்கப்பட்டது. பிப்ரவரி 7ஆம் தேதிக்குள் பிரமாணப் பத்திதரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று விசாரணை ஆணையம் உத்தரவிட்டிருந்தது.
பெங்களூரு சென்ற ஆவணங்கள்
ஆனால் ஜெயலலிதா மரணத்தில் தனக்கு பங்கு இருப்பதாக புகார் கொடுத்தது யார் என்று கூறினால் மட்டுமே தன்னால் சம்மனுக்கு பதில் தர முடியும் என்று நீதிபதி ஆறுமுகசாமியிடம் சசிகலா தரப்பு தெரிவித்தது.
இதனை ஏற்றுக்கொண்ட ஆணையம் சசிகலா கேட்ட புகார்தாரர் குறித்த விவரங்களை தர தயாராக உள்ளதாக தெரிவித்திருந்தது. இந்த நிலையில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக 2,956 பக்க ஆவணங்களை சசிகலா தரப்பிடம் விசாரணை ஆணையம் அளித்ததோடு விரைவில் பதில் அளித்த காலக்கெடு விதித்தார்.
காலம் தாழ்த்திய சசிகலா
ஒவ்வொரு முறையும் விசாரணைக்கு வரும் போதும் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய சசிகலா கூடுதல் அவகாசம் கேட்டார். இதுபோல 5 முறை அவகாசம் அளிக்கப்பட்டது. இன்று இந்த வழக்கு விசாரணை வந்த போதும் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய மேலும் ஒருவார காலம் அவகாசம் கேட்டார் சசிகலா, ஆனால் அதனை ஏற்க நீதிபதி மறுத்து விட்டார்.
நீதிபதி ஏற்க மறுப்பு
சசிகலாவிற்கு ஏற்கனவே 5 முறை அவகாசம் அளித்து விட்ட நிலையில் மேலும் அவகாசம் தர முடியாது என்று கூறி மனுவை நீதிபதி ஆறுமுகசாமி தள்ளுபடி செய்தார். உடனடியாக பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யாவிட்டால் ஜெயலலிதாவிற்கு எதிரான முடிவை எடுக்க வேண்டியிருக்கும் என்று கூறினார்.
பெங்களூரு சிறையில் விசாரணை
சசிகலா தனது வாக்குமூலத்தை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்யாவில்லை, சிறைக்கு நேரில் சென்று விசாரணை நடத்த வேண்டியிருக்கும் என்றும் நீதிபதி ஆறுமுகசாமி கூறினார். ஒவ்வொரு முறையும் கால அவகாசம் கேட்டு விசாரணையை தாமதப்படுத்த முயற்சி செய்வதாகவும் சசிகலாவின் வழக்கறிஞரை நீதிபதி ஆறுமுகசாமி கண்டித்தார். ஆணையத்தின் கிடுக்குப்பிடியால் சசிகலா குடும்பத்தினர் ஆடிப்போயுள்ளனர்.