புரட்சி தாரகை... கழகத்தின் தலைமகளே... எதிர்காலமே.... சசிகலாவுக்கு குவியும் பட்டங்கள்!
சசிகலாவுக்கு அதிமுகவினர் புதிய பட்டங்களை அளித்து வருகின்றனர். இந்த போஸ்டர்களுக்கு அதிமுக தொண்டர்கள் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.
சென்னை: அதிமுகவின் தலைமை பொறுப்பை சசிகலாவை ஏற்க வைக்க முயற்சிகள் நடைபெறுகின்றன. அதே நேரத்தில் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து புதிய புதிய பட்டங்களும் அதிமுகவினர் பேனர்கள் வைத்தும் வருகின்றனர்.
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அதிமுகவின் அடுத்த தலைமை யார் என்ற கேள்வி எழுந்தது. அதிமுக நிர்வாகிகள் பலரும் சசிகலாவை தலைவராக ஏற்றுக் கொள்வதாக கூறி வருகின்றனர்.
ஆனால் அதிமுக தொண்டர்கள் சசிகலாவை ஏற்க மறுத்து வருகிறார்கள். இந்த நிலையில் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து தினமும் போயஸ் கார்டனுக்கு ஆயிரக்கணக்கானோர் வரவழைக்கப்படுகின்றனர்.
இதனிடையே சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து புரட்சி தாரகையே! கழகத்தின் தலைமகளே! கழகத்தின் எதிர்காலமே! கழகத்தின் நிகழ்காலமே! என புதிய புதிய பட்டங்களுடன் பேனர்களையும் அதிமுகவினர் வைத்து வருகின்றனர். இந்த பேனர்களை அதிமுக தொண்டர்கள் சில இடங்களில் கிழித்தும் வருகின்றனர்.
அத்துடன் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாதான் அதிமுகவுக்கு தலைமை ஏற்க வேண்டும் என்ற பேனர்களும் வைக்கப்படுகின்றன. இவற்றை சசிகலா ஆதரவாளர்கள் அகற்றியும் வருகின்றனர்.