காஞ்சி, திருவண்ணாமலை, சமயபுரம் கோவில்களில் கும்பாபிஷேகம் - சசிகலாவிற்கு வரிசை கட்டும் அழைப்பு
தமிழகத்தில் உள்ள மிக முக்கியமாக கோவில்களில் நடைபெற உள்ள கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு சசிகலாவை நேரில் சந்தித்து நிர்வாகிகள், சிவாச்சாரியார்கள் சந்தித்து அழைப்பு விடுத்து வருகின்றனர்.
சென்னை: அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா நியமனம் செய்யப்பட்ட பின்னர் தினசரியும் பலர் போயஸ்தோட்ட இல்லத்திற்கு சென்று சசிகலாவை நேரில் சந்தித்து வருகின்றனர். அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது எம்.ஜி.ஆர் நாளிதழில் இந்த புகைப்படங்களும் வெளியாகி வருகிறது.
காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர், சமயபுரம் மாரியம்மன் கோவில்கள் புதுப்பிக்கப்பட்டு மகா கும்பாபிஷேகத்திற்கு தயாராக உள்ளன. இந்த கோவில்களில் நடைபெறும் விழாவில் பங்கேற்று சிறப்பிக்குமாறு அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை நேரில் சந்தித்து சிவாச்சாரியார்களும், கோவில் நிர்வாகிகளும் அழைப்பு விடுத்துள்ளனர்.
இது குறித்து அதிமுக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு :
காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் 09.02.2017 அன்று நடைபெற உள்ளது. இதற்கான அழைப்பிதழை கோவில் நிர்வாக அதிகாரி நாராயணன் மற்றும் கார்த்திக் சாஸ்திரி, வினோத் குமார் ஆகியோர் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை சென்னை போயஸ்தோட்ட இல்லத்தில் நேரில் சந்தித்து கொடுத்து அழைத்தனர்.
இதே போல திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வர் திருக்கோவில் குடமுழுக்கு விழா 6.02.2017 அன்று நடைபெற உள்ளது. இதில் பங்கேற்குமாறு சசிகலாவை நேரில் சந்தித்த சிவாசாரியார்கள் அழைப்பு விடுத்தனர். இதேபோல திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் 06.02.2017 அன்று நடைபெற உள்ளது. இதில் பங்கேற்று சிறப்பிக்குமாறு கோவில் நிர்வாகிகள், குருக்கள், ஆகியோர் நேரில் சந்தித்து அழைப்பி விடுத்தனர்.
தினசரியும் கட்சி நிர்வாகிகளும் போயஸ் தோட்ட இல்லத்திற்கு சென்று சசிகலாவை சந்தித்து நமது எம்.ஜி.ஆர் சந்தாவிற்கான பணம், காசோலை கொடுப்பது புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்து வருகின்றனர். இப்போது கோவில் நிர்வாகிகளும் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்து வருகின்றனர்.
ஜெயலலிதா முதல்வராகவும், பொதுச்செயலாளராகவும் இருந்த வரை கோவில்களில் நடைபெறும் கும்பாபிஷேக விழாக்களுக்கு சென்று வருவார் சசிகலா. இப்போது நேரிலேயே வந்து பலரும் அழைப்பு விடுத்துள்ளதால் முன்பு போல செல்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.