அமைச்சரவையில் மாற்றமில்லை.... ஈபிஎஸ் போட்ட போடால் ஆடிப் போன சசி குரூப்
தமிழக அமைச்சரவையில் மாற்றம் எதுவும் இருக்காது என்று முதல்வர் கூறியுள்ளது சசிகலா ஆதரவு எம்எல்ஏக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சேலம்: சசிகலா ஆதரவு எம்எல்ஏக்கள் சிலர் அமைச்சர் பதவி கேட்டு நெருக்கடி கொடுத்து வருகின்றனர். எனவே அமைச்சரவையில் விரைவில் மாற்றம் இருக்கலாம் என்று கூறப்பட்ட நிலையில் இன்று ஏற்காட்டில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிச்சாமி, தமிழக அமைச்சரவையில் மாற்றம் எதுவும் இருக்காது என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எம்எல்ஏக்களிடம் சாதி பாகுபாடு காட்டும் எண்ணம் அரசுக்கு இல்லை என்று கூறியுள்ளார்.
அதிமுகவின் இரு அணிகளும் இணைய பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எம்எல்ஏக்கள் சந்திப்பு
கடந்த 6 நாட்களாக எம்எல்ஏக்கள் அணி அணியாக சந்தித்த நிலையில் முதல்வர் பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார். அமைச்சர் பதவிக்காக சில எம்எல்ஏக்கள் சந்தித்ததாக தகவல் வெளியானது.
ஈபிஎஸ் சமாதானம்
சசிகலா, டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தங்கத்தமிழ்செல்வன், வெற்றிவேல் ஆகியோர் முதல்வரை சந்தித்து பேசினர். அப்போது சசிகலாவை ஒதுக்கி வைத்தது தொடர்பாக அறிவிப்பு பற்றி கேட்டதாகவும், அதற்கு எடப்பாடி பழனிச்சாமி சமாதானம் பேசி அனுப்பியதாகவும் தகவல் தெரிவித்தன.
அதிர்ச்சியில் சசி குரூப்
இந்த நிலையில் அமைச்சரவை மாற்றமில்லை என்றும், அதிமுகவின் இரு அணிகளும் இணைய பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்றும் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளது சசிகலா குரூப் எம்எல்ஏக்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.