தலைக்கு 10 கோடி.. கூவத்தூரில் விற்பனை.. அம்பலப்படுத்திய சரவணன் எம்.எல்.ஏ! #MLAsForSale
கூவத்தூரில் இருந்து தப்பிய எம்.எல்.ஏ. சரவணன் பேரம் பேசும் வீடியோ ரிலீஸ் ஆகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: சசிகலா அணியில் எம்.எல்.ஏ.க்களை சேர்க்க பல கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டதாகவும், கருணாஸ், தமிமுன் அன்சாரி, தனியரசு ஆகியோருக்கு தலா ரூ. 10 கோடி பணம் தரப்பட்டதாகவும் மதுரை தெற்கு தொகுதி எம்எல்ஏ சரவணன் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டைம்ஸ் நவ் டிவியும்- மூன் டிவியும் இணைந்து நடத்திய ஸ்டிங் ஆபரேஷன் மூலம் இது அம்பலமாகியுள்ளது. அதில் சரவணன் பேசியதை ரகசியமாக டேப் செய்து வெளியிட்டுள்ளனர்.
ஓ.பி.எஸ். புரட்சிக்குப் பிறகு அதிமுக இரண்டாக உடைந்தது. சசிகலா தரப்பு தனது தரப்பு எம்.எல்.ஏக்களைத் தக்க வைக்க கூவத்தூரில் உள்ள ரிசார்ட்டில் கொண்டு போய் அடைத்தது. கூவத்தூர் முகாம் மிகப் பிரபலமானது. எம்.எல்.ஏக்கள் நன்றாக குளிப்பாட்டப்பட்டனர்.
இந்த நிலையில் கூவத்தூரில் என்ன நடந்தது என்பதை மதுரை தெற்குத் தொகுதி எம்.எல்.ஏ சரவணன் வாய் மூலமாக டைம்ஸ் நவ் - மூன் டிவி இணைந்து நடத்திய ஸ்டிங் ஆபரேஷன் கறந்து வெளியே கொண்டுள்ளது. கூவத்தூர் சொகுசு விடுதியில் அடைக்கப்பட்டிருந்த எம்எல்ஏக்கள் கூட்டத்திலிருந்து, மதுரை தெற்கு தொகுதி எம்எல்ஏ சரவணன் தப்பி வந்து பன்னீர்செல்வம் அணியில் இணைந்தார்.
LISTEN IN | TIMES NOW’s Shabbir Ahmed speaks on #MLAsForSale expose pic.twitter.com/aZkg0onI5N
— TIMES NOW (@TimesNow) June 12, 2017
சமீபத்தில் மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி அணியில் தஞ்சம் அடைந்தார். இந்நிலையில் சசிகலா அணியில் எம்.எல்.ஏ.க்களை சேர்க்க பல கோடி பேரம் பேசியது அம்பலமாகியுள்ளது. எம்.எல்.ஏ சரவணன் பேரம் குறித்து பேசும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
அதில் கூவத்தூர் முகாமில் எந்தத் தவறும் நடக்கவில்லை. யாரையும் மிரட்டவில்லை. அடிக்கவில்லை. தண்ணி (மது) இருந்துச்சு. கருணாஸ் குடித்தார்.
சொந்த ஊரில் இருந்து வந்த எம்.எல்.ஏ.க்களை விமானநிலையத்தில் மடக்கி, விமான நிலையத்தில் பேருந்தில் ஏற்றியபோது எம்.எல்.ஏ.வுக்கு தலா ரூ.2 கோடி என பேரம் பேசினார்கள். பிறகு பின்னர் எம்.எல்.ஏ. விடுதியில் இருந்து ஆளுநரை சந்திக்க சென்றபோது பேரம் ரூ.4 கோடியானது. கூவத்தூர் சேர்ந்தபோது எம்.எல்.ஏ.க்களுக்கு ரூ.6 கோடி தர முன்வந்தனர்.
ஒரே நேரத்தில் பல கோடி திரட்ட முடியாது என்பதால் தங்கமாக தருவதாக கூறினார்கள். தனியரசு, கருணாஸ், தமிமுன் அன்சாரி போன்ற கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏ-க்களுக்கு தலா 10 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது என்றார் சரவணன்.