இதுதான் சசி ஸ்டைல்! சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கே ரிவிட் அடிக்கும் புதிய சீராய்வு மனு!
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரில் சிறை தண்டனை அனுபவித்து வரும் சசிகலா, உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு விலக்கு அளிக்கப்பட்டது போன்று தமக்கும் விலக்கு அளிக்க வேண்டும் எனக் கோரி சசிகலா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 1991- 96 வரை தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, வருமானத்துக்கு அதிகமாக அன்றைய மதிப்பில் ரூ.66 கோடியை தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி சேர்த்ததாக குற்றம்சாட்டப்பட்டது.
சென்னை தனிக்கோர்ட்டில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வந்தது. இதனிடையே 2001 தேர்தலில் மீண்டும் ஜெயலலிதா வெற்றிபெற்று முதல்வர் ஆனார். இதனையடுத்து தி.மு.க பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன், ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதனைத் தொடர்ந்து, 2004 ல் இந்த வழக்கு பெங்களூரு தனி நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
கடந்த 2005 முதல் பல்வேறு காரணங்களை சொல்லி பல முறை வாய்தா மேல் வாய்தா வாங்கி வழக்கை இழுத்தடித்து வந்தனர் ஜெயலலிதா மற்றும் சசிகலா உள்ளிட்டோர். அவர்கள் தாக்கல் செய்த பல மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்த ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கை பச்சப்பரே, மனோலி, ஆன்ரிக்ஸ், மல்லிகா அர்ஜுனையா, சோமராசு, பாலகிருஷ்ணா என ஆறு நீதிபதிகள் விசாரித்தனர். ஏழாவது நீதிபதியாக முடிகவுடர் நியமிக்கப்பட்டார். அவருக்குப் பின்னர் 8வது நீதிபதியாக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் விஜிலென்ஸ் துறையின் பதிவாளராக இருந்த ஜான் மைக்கேல் டி.குன்ஹா நியமிக்கப்பட்டார்.
ஜான் மைக்கேல் டி.குன்ஹா நியமிக்கப்பட்ட பின்னர்தான் ஆமையாக நடைபெற்று வந்த சொத்துக் குவிப்பு வழக்கு ஜெட் வேகமெடுத்தது. ஒருவழியாக கடந்த 2014ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி, ஜெயலலிதா சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார் குன்ஹா. குற்றம்சாட்டப்பட்ட ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறையும், ரூ.100 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.
அதேபோல் அவருக்கு உடந்தையாக இருந்த தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோருக்கு தலா 4 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.இதனை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்ற மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த தனிநீதிபதி குமாரசாமி அனைவரையும் விடுதலை செய்தார்.
கர்நாடகா அரசு மேல்முறையீடு செய்தது. கர்நாடக அரசின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் பிப்ரவரி 14-ந் தேதி தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பில் ஜெயலலிதா உள்ளிட்டோர் குற்றவாளிகள் என்று பெங்களூர் நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்தது. ஆனால் ஜெயலலிதா இறந்துவிட்டதால் அவரை குற்றவாளி என பிரகடனம் செய்து சிறை தண்டனை விதிக்க முடியாது எனவும் தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தனர்.
அதே நேரத்தில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கான 4 ஆண்டுகால சிறை தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம். இதையடுத்து சசிகலா உள்ளிட்டோர் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையடுத்து கர்நாடகா அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவில், மேல்முறையீட்டு வழக்கு முடிவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட பின்னர்தான் ஜெயலலிதா மறைந்தார். ஆகையால் அவரையும் குற்றவாளி என பிரகடனம் செய்து ரூ100 கோடி அபராதத்தை வசூலிப்பது குறித்து உத்தரவிட வேண்டும்; அதற்காக பிப்ரவரி 14-ந் தேதி அளித்த தீர்ப்பை மறுசீராய்வு செய்ய வேண்டும் என அம்மனுவில் வலியுறுத்தப்பட்டிருந்தது.
இதனை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்வா ராய் பெஞ்ச், கர்நாடகா அரசின் சீராய்வு மனுவை தள்ளுபடி செய்துவிட்டது. இப்படி பல்வேறு காலகட்டங்களை கடந்து வந்த சொத்துக்குவிப்பு வழக்கில் தற்போது 4 ஆண்டுகள் சிறை தண்டனையை மறுசீராய்வு செய்ய கோரி உச்ச நீதிமன்றத்தில் சசிகலா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.