பெங்களூரு சிறையில் "நாட்டாமை" நடத்திய குடும்ப பஞ்சாயத்து.. தினகரனுக்கு கடும் எச்சரிக்கை!
தினகரன் தனிக்கட்சி என தொடங்கினாலும் அந்த கட்சிக்கும் நானே பொதுச்செயலாளர் என மிரட்டி வைத்திருக்கிறாராம் சசிகலா
Recommended Video
சென்னை: தினகரன் தனிக்கட்சி தொடங்கினாலும் அந்த கட்சிக்கும் தாமே பொதுச்செயலாளர்; ரொம்பவும் ஆட்டம் காட்டினால் தினகரனையும் கட்சியில் இருந்து தூக்கிவிடுவேன் என பெங்களூரு சிறையில் நடந்த பஞ்சாயத்தில் கொந்தளித்தாராம் சசிகலா.
பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்திக்க விவேக் ஜெயராமனோடு சென்றிருக்கிறார் தினகரன். ' நான் இல்லாவிட்டால் இந்தக் கட்சிக்குள் நீ வந்திருக்க முடியாது. அனைவரையும் அரவணைத்துச் செல்ல வேண்டும்' எனக் கோபத்துடன் தினகரனிடம் பேசியிருக்கிறார் சசிகலா.
மன்னார்குடி குடும்பத்தின் சண்டைகளுக்கு சமரசம் பேசும் இடமாகவே மாறிவிட்டது பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலை. கடந்த சில வாரங்களாக தினகரனை மையப்படுத்தியே குடும்பத்தினர் மோதிக் கொண்டிருக்கின்றனர்.
செல்வாக்கான தலைவர் நான்...
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வெற்றிக்குப் பிறகு தினகரனின் அணுகுமுறையில் பெரும் மாற்றம் வந்துவிட்டது. ' மக்கள் என்னைத்தான் அடுத்த தலைவராக நினைக்கிறார்கள். அ.தி.மு.க தொண்டர்களே என்னை நம்பித்தான் உள்ளனர். ஈபிஎஸ், ஓபிஎஸ் அரசியல் எல்லாம் மத்தியில் ஆட்சி உள்ளவரையில்தான். எம்.ஜி.ஆருக்குப் பிறகு செல்வாக்கான தலைவராக உயர்ந்துவிட்டேன்' என ஆதரவாளர்களிடம் பேசிக் கொண்டிருக்கிறார்.
காசே இல்ல சின்னம்மா
தேர்தல் வெற்றிக்குப் பிறகு சசிகலாவை சந்தித்த தினகரன், ' தேர்தல் செலவுக்குக் காசு இல்லாமல் தவித்தேன். ' சின்னம்மா சொல்லட்டும் தருகிறேன்' என ஒதுங்கிக் கொண்டார் விவேக். அவருக்கு அரசியல் ஆசை வந்துவிட்டது. எவ்வளவு கஷ்டப்பட்டு ஜெயித்தேன்னு எனக்குத்தான் தெரியும். இதற்கு மேலும் அந்தக் குடும்பத்துக்கு இடம் கொடுத்தால் நமக்குத்தான் ஆபத்து' எனக் கூறினாராம்,
விவேக்குக்கும் டோஸ்
மேலும் வெற்றிவேல் வெளியிட்ட வீடியோவை வைத்து கிருஷ்ணபிரியா செய்த அரசியல் பற்றியும் விவரித்திருக்கிறார் தினகரன். இதன்பிறகு விவேக்கைக் கூப்பிட்டு சத்தம் போட்டு அனுப்பினார் சசிகலா.
சிகரெட் போட போகிறேன்
இதனால்தான் கோபப்பட்ட விவேக், ' நீங்க சொல்ற வேலையைச் செஞ்ச எனக்கு இதுவும் வேணும். இன்னமும் வேணும். குடும்பத்துக்குள்ள கெட்ட பெயரை சம்பாதிக்க எனக்கு விருப்பமில்லை.. பெங்களூருக்கு போய் கடை கடையாக சிகரெட் போடவும் ரெடி' என பொங்கினாராம்.
சசிகலா கூட்டிய கட்ட பஞ்சாயத்து
ஜெயா டி.வி அதிகாரத்தைக் கைப்பற்றுவதுதான் தினகரனின் நோக்கமாக இருக்கிறது. தொடர்ந்து நடந்து வரும் சண்டைகளில் விருப்பமில்லாத சசிகலா, ' சிறைக்கு இரண்டு பேரும் வாருங்கள்' எனத் தகவல் சொல்லி அனுப்பினார். இதையடுத்து பஞ்சாயத்து நடந்துள்ளது.
சசிகலா கொடுத்த வார்னிங்
இச்சந்திப்பிலும் காரசாரமாக விவாதங்கள் நடந்ததாகச் சொல்கின்றனர் சசிகலா தரப்பினர். 40 நிமிடங்கள் வரையில் நீண்ட இந்த சந்திப்பில் தினகரனிடம் பேசிய சசிகலா, ' குடும்பத்தை அரவணைத்துச் செல்ல வேண்டும் என ஆரம்பம் முதலே சொல்லி வருகிறேன். யாரும் அதைக் கேட்பதாக இல்லை. நான் இல்லாவிட்டால் நீயும் வெங்கடேஷும் கட்சிக்குள் வந்திருக்க முடியாது. பத்தாண்டுகளுக்குப் பிறகு கட்சிக்குள் உன்னை சேர்க்கக் காரணமே நான்தான். ஆனால், என்னை ஒதுக்கிவைத்துவிட்டு தனிக்கட்சி தொடங்கும் முடிவுக்குச் சென்றுவிட்டாய். அப்படியே தொடங்கினாலும் அதில் நான்தான் பொதுச் செயலாளராக இருக்க வேண்டும். 'உச்சநீதிமன்றமே குற்றவாளி எனக் கூறிவிட்டது. குற்றவாளியை கட்சிக்குள் சேர்க்கக் கூடாது' என்றெல்லாம் கூறுவதை நான் ஏற்க மாட்டேன். புதிய கட்சி தொடங்கினால், அதில் குடும்பத்து ஆட்களுக்கும் பொறுப்பு கொடுக்க வேண்டும். இனியொருமுறை குடும்பத்து ஆட்களிடம் இருந்து புகார் வந்தால், உன்னை நீக்கி வைக்கவும் தயங்க மாட்டேன்' என எச்சரித்து அனுப்பி இருக்கிறார் சசிகலா.