என் தனிப்பட்ட வாழ்க்கையில் சசியும் அவரது உறவினர்களும் அடிக்கடி குறுக்கீடு செய்கின்றனர்: தீபா 'பகீர்'
தனது தனிப்பட்ட வாழ்க்கையில் சசிகலாவும் அவரது உறவினர்களும் அடிக்கடி குறுக்கீடு செய்வதாக ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா பகீரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை: தனது தனிப்பட்ட வாழ்க்கையில் சசிகலாவும் அவரது உறவினர்களும் அடிக்கடி குறுக்கீடு செய்வதாக ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா பகீரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும் எந்த விலை கொடுத்தாவது தன்னை அழித்துவிடலாம் என சசிகலா குடும்பம் துடிப்பதாகவும் தீபா குற்றம்சாட்டியுள்ளார்.
ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபாவுக்கும் சசிகலா குடும்பத்துக்கும் ஆரம்பம் முதலே ஏழாம் பொறுத்தமாக உள்ளது. தீபா, ஜெயலலிதாவை நெருங்கி விடக்கூடாது என்பதில் சசிகலா குடும்பம் கண்ணும் கருத்துமாக இருந்ததே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அவரது சாயலில் இருந்த தீபாவுக்கு ஆதரவு தெரிவித்த அதிமுக தொண்டர்கள் அவரை அரசியலில் ஈடுபடும்படி வலியுறுத்தினர். இதையடுத்து தீபா, எம்ஜிஆர் அம்மா தீபா என்ற பேரவையை தொடங்கினார்.
குடைச்சல் கொடுக்கும் சசி குரூப்
மேலும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் தீபா, தனது அத்தை ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மத்தை வெளிக்கொண்டு வருவேன் என தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த சசி குரூப் தீபாவுக்கு குடைச்சலை கொடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொலை மிரட்டல் விடுக்கப்படுகிறது
இந்நிலையில் தீபா ஆங்கில நாளிதழுக்கு ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் "ஆர்.கே.நகர் தொகுதியில் நான் போட்டியிட கூடாது என்று பல்வேறு தரப்பில் இருந்தும் எனக்கு மிரட்டல்கள் வந்தன. எனக்கு கொலை மிரட்டல் கூட விடுக்கப்பட்டது.
வாழ்கையில் குறுக்கீடு செய்கிறார்கள்
அனைத்து அச்சுறுத்தல்களையும் மீறி நான் போட்டியிடுகிறேன். இதையடுத்து எந்த விலை கொடுத்தாவது என்னை அழித்து விடலாம் என்று துடிக்கிறார்கள். எனது தனிப்பட்ட வாழ்க்கையில் சசிகலாவும் அவரது உறவினர்களும் அடிக்கடி குறுக்கீடு செய்கிறார்கள்.
என் கணவரை எனக்கு எதிராக தூண்டிவிட்டுள்ளனர்
என் கணவரை எனக்கு எதிராகத் தூண்டி விட்டனர். என்னைச் சுற்றி தீய சக்திகள் இருப்பதாக என் கணவரை சொல்ல வைத்தனர். என் இமேஜை கெடுக்க இப்படி எல்லாமா சொல்வார்கள் என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
பெயரைச் சொல்ல அவசியம் இல்லை
தேர்தல் களத்தில் இருந்து என்னை விரட்டவே இப்படி சொன்னார்கள். ஆர்.கே.நகர் தேர்தலில் என் கணவர் பெயர் விடுபட்டது பற்றி வமர்சிக்கிறார்கள். என் கணவர் பெயரைச் சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை.