சசிகலா தரப்பினர் போலி ஆவணங்கள் தாக்கல்... இரட்டை இலை எங்களுக்கே - கே.பி முனுசாமி
இரட்டை இலை வழக்கு விவகாரத்தில் சசிகலா தரப்பு கால தாமதம் செய்ய முயற்சி செய்வதாக கே.பி முனுசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
டெல்லி: இரட்டை இலை விவகாரத்தில் சசிகலா தரப்பு கால தாமதம் செய்ய முயல்கிறது என கே.பி. முனுசாமி தெரிவித்துள்ளார். டிடிவி தினகரனுக்கு வேறு வேலை இல்லை எனவும் கே.பி. முனுசாமி கூறியுள்ளார்.
ஜெயலலிதா மறைவை தொடர்ந்து அதிமுகவில் பிளவு ஏற்பட்டது. இதையடுத்து இரட்டை இலை சின்னத்தை கடந்த ஏப்ரல் மாதம் தேர்தல் ஆணையம் முடக்கியது. ஆகஸ்டில் பிளவுபட்ட இபிஎஸ்-ஓபிஎஸ் அணியினர் ஒன்று சேர்ந்ததை தொடர்ந்து இரட்டை இலை வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
என்றாலும் டிடிவி தினகரன் துணை பொதுச்செயலாளர் என்ற பொறுப்பில் அதிமுக அம்மா அணியை நடத்தி வருகிறார். இவரது தரப்பில் இரட்டை இலை தங்களே வேண்டும் என்று ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
தேர்தல் ஆணையத்தில் இது குறித்து பலமுறை விசாரணை நடைபெற்று விட்டது. இறுதியாக கடந்த வாரம் முக்கிய விசாரணை நடைபெற்றது. இறுதி விசாரணை அக்டோபர் 30ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
நாளை வழக்கு விசாரணைக்கு வர உள்ளதால் இந்த விசாரணையில் பங்கேற்பதற்காக எடப்பாடி-ஓபிஎஸ் தரப்பில் கேபி முனுசாமி, மனோஜ்பாண்டியன், மைத்ரேயன் ஆகியோர் டெல்லி சென்றனர்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கே.பி முனுசாமி, தேர்தல் ஆணையத்தில் தவறான தகவல்கள் கொடுத்துள்ளதால் தோல்வி பயத்தில் வாய்தா வாங்க முயற்சி செய்கின்றனர். இரட்டை இலை எங்களுக்கே கிடைக்கும் என்றும் முனுசாமி கூறினார்
இரட்டை இலை வழக்கை சசிகலா தரப்பினர் காலதாமதம் செய்ய முயல்வதாக குற்றம் சாட்டினார். நாளை நடைபெற உள்ள வழக்கில் எங்களுக்கே இரட்டை இலை கிடைக்கும் என்றும் முனுசாமி தெரிவித்தார்.
தை பிறந்தால் தமிழர்களுக்கு வழி பிறக்கும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளாரே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர், இதற்கு கே.பி முனுசாமி, டிடிவி தினகரனுக்கு வேறு வேலையே இல்லை என்று கூறினார்.