சசிகலா மட்டும் தான் அதிமுகவுக்கு ஓரே தீர்வு- தினகரன்
சசிகலாவால் மட்டுமே அ.தி.மு.க.வை வழி நடத்த முடியும் என்று மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் டி.டி.வி தினகரன் கூறியுள்ளார்
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் புரட்சி பயணம் என்ற பெயரில் மக்களை நேரடியாக சந்தித்து வரும் தினகரன், சசிகலாவால் மட்டுமே அ.தி.மு.க.வை வழி நடத்த முடியும் என்று தெரிவித்துள்ளார்
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த சுவாமிமலையில் டி.டி.வி.தினகரனின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பேசிய தினகரன், தமிழக மக்களின் நலனுக்கு எதிரான பல திட்டங்களை ஜெயலலிதா தடுத்தி நிறுத்தி வைத்தார். ஆனால் இப்போதைய தமிழக அரசு மத்திய அரசிடம் பயந்து கொண்டு அந்த திட்டங்களை எல்லாம் தமிழகத்தில் செயல்படுத்தி தமிழக மக்களுக்கு எதிராக மக்கள் விரோத அரசாக செயல்பட்டு வருவதாக கூறினார்.
மேலும் பேசிய அவர், தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகளின் துயரங்களை உணர்ந்த ஜெயலலிதா உச்சநீதிமன்றம் சென்று காவிரி நடுவர் மன்றம் அமைத்து அதன் மூலம் சட்டப் போராட்டம் நடத்தி காவிரியில் நமக்கு உரிய தண்ணீரை பெற்று தந்தார். ஆனால் தமிழக முதல்வர் நமக்கு உரிய தண்ணீரை நீதிமன்றம் மூலம் கேட்டு பெறாமல், கர்நாடக முதல்வரை சந்திக்க நேரம் கேட்டுக் கொண்டு இருக்கிறார் என்றும் இந்த விவகாரத்தில் மத்தியஅரசு பாராபட்சமாக கடந்து கொள்வதாகவும் அவர் கூறினார்.
மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழக வளர்ச்சிக்கு ஏதும் இல்லாத நிலையில், தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க.வை சசிகலாவால் மட்டுமே தொடர்ந்து வழிநடத்த முடியும். இப்போது அதிமுக தலைமையில் இருப்பவர்கள் மக்களை ஏமாற்ற பார்க்கிறார்கள். மக்களுக்கெதிரான இந்த அரசு விரைவில் அகற்றப்படும் என்றும் விரைவில் ஜெயலலிதாவின் அரசு அமையும் என்றும் தினகரன் நம்பிக்கை தெரிவித்தார்.