அக்காவும், அவரும் இல்லை, எனக்கு நிம்மதியும் இல்லை... விரக்தியின் உச்சத்தில் சசிகலா!
ஜெயலலிதா, கணவர் நடராஜன் உயிரிழப்பால் கடுமையான மனஉளைச்சலில் சசிகலா இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அவர் பரோல் முடிவதற்கு முன்னரே சிறைக்கு திரும்பியுள்ளார்.
Recommended Video
தஞ்சாவூர்: தன்னுடைய வாழ்நாள் முழுவதும் ஜெயலலிதாவின் நிழலாகவும், நடராஜன் சொல்வதைச் செய்வதுமாகவே காலம் கடத்திய சசிகலா இருவரின் மறைவால் மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் 15 நாட்கள் பரோலில் வெளிவந்தவர் பரோல் முடியும் 3 நாட்களுக்கு முன்னதாகவே சிறைக்கு திரும்பியுள்ளார்.
சசிகலா மன்னார்குடியைச் சேர்ந்த சாதாரண பெண்ணான இவர் இன்று தமிழக அரசியல் களத்தில் யாராலும் மறக்க முடியாதவர். ஜெயலலிதாவின் வாழ்க்கை ரகசிய பக்கங்கள் அனைத்தும் அறிந்த ஒரே நபர். ஜெயலலிதாவின் நிழல் போல இருந்து அவருடைய அரசியல், சொந்த வாழ்வில் கோலோச்சியவர், இதற்காக சசிகலாவும் அவரது குடும்பத்தினரும் அடைந்த பலாபலன்கள் ஏராளம்.
சசிகலாவின் கணவர் நடராஜனின் அரசியல் ஆலோசனைகளை ஏற்று செயல்பட்ட ஜெயலலிதா அதிமுகவை கைப்பற்றி முதல்வராக ஆட்சிக் கட்டிலிலும் அமர்ந்தார். ஜெயலலிதா முதல்வராக நடராஜன் தான் முக்கிய காரணம், அரசியலை விட்டே ஒதுங்குவதாக ஜெயலலிதா சொன்ன போது ஊக்கம் கொடுத்தவர் நடராஜன் தான் என்றும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்திரலேகா தெரிவித்திருந்தார்.
தன் வாழ்நாள் முழுவதிலும் எல்லோருக்கும் தெரிந்து ஜெயலலிதாவுடனும், ஜெயலலிதாவிற்கே தெரியாமல் கணவர் நடராஜனின் செயல்படி கேட்டு நடந்து வந்தார் சசிகலா. இந்நிலையில் டிசம்பர் 5, 2016ல் நடந்த ஜெயலலிதாவின் மறைவு மற்றும் மார்ச் 20ல் கணவர் நடராஜன் உயிரிழந்தது என்று அடுத்தடுத்து தன் வாழ்நாளின் பெரும்பகுதியை ஆட்கொண்டவர்களை சசிகலா இழந்து வருகிறார்.
இது சசிகலாவிற்கு மிகுந்த மனவேதனையை அளித்துள்ளதாக தெரிகிறது. இதனால் மனஅழுத்தத்தில் சசிகலா இருப்பதாக தெரிகிறது. நேற்று தஞ்சாவூரில் ம.நடராஜனின் படத்திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நல்லகண்ணு, பழ.நெடுமாறன், கி.வீரமணி, வைரமுத்து உள்ளிட்டோருடன் குடும்ப உறுப்பினர்கள் தினகரன், திவாகரன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியின் போது பேசிய சசிகலாவின் சகோதரர் திவாகரன், எனது சகோதரி சசிகலா நிம்மதி இழந்து இருக்கிறார். இன்று மட்டும் இல்லை. கடந்த 35 ஆண்டுகளாக அவர் நிம்மதியின்றி தான் இருக்கிறார் என்று வருத்தத்துடன் தெரிவித்தார். சசிகலா தற்போது நிம்மதியில்லாமல் இருப்பதற்கு காரணமாக சொல்லப்படுவது நடராஜனின் சொத்துகளை பிரிப்பதில் தனது குடும்பத்தினருக்கும், நடராஜன் குடும்பத்தினருக்கும் இடையே நடக்கும் பிரச்னையே காரணம் என்று கூறப்படுகிறது.
இத்தனை ஆண்டுகாலம் சேர்த்த சொத்தாலும் பிரச்னை, கட்சியை தன்னுடைய கைவசமே வைத்துக் கொண்டு சிறையில் இருந்த படி ஜெயலலிதா போல கட்சியை வழி நடத்தலாம் என்று நினைத்ததும் கைகூடவில்லை. அதிமுகவை எதிர்த்து தினகரன் தனிக்கட்சி தொடங்கி தனது இஷ்டத்திற்கு செயல்படுகிறார், மற்றொருபுறம் விவேக், கிருஷ்ணப்ரியா, தினகரன் பஞ்சாயத்து என்று சொந்தங்களாலும் பிரச்னை மேல் பிரச்னை என்று விரக்தியின் உச்சத்தில் இருக்கிறாராம் சசிகலா.
இதன் காரணமாகவேத் தான் ஏப்ரல் 3ம் தேதி பிற்பகலில் பரோல் முடிந்து பெங்களூரு சிறைக்கு செல்ல வேண்டிய நிலையில் முன்கூட்டியே சசிகலா பெங்களூரு சிறைக்கு புறப்பட்டு விட்டதாகக் கூறப்படுகிறது. மற்றொருபுறம், சிறை விதிகளை சரிவர செயல்படுகிறேன் என்ற நன்னடத்தையை பெற்று அதன் மூலம் முன்கூட்டியே வெளிவருவதற்கான திட்டம் என்றும் சொல்லப்படுகிறது.